Page Loader
போர் பதட்டம்: ஈரானிய வான்வெளியைத் தவிர்க்கும் ஏர் இந்தியா விமானங்கள்

போர் பதட்டம்: ஈரானிய வான்வெளியைத் தவிர்க்கும் ஏர் இந்தியா விமானங்கள்

எழுதியவர் Sindhuja SM
Apr 13, 2024
11:45 am

செய்தி முன்னோட்டம்

இஸ்ரேல் மீது பதிலடித் தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதை தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஏர் இந்தியா விமானங்கள் ஈரானிய வான்வெளிக்குள் செல்வதை இன்று தவிர்த்தன. ஈரானிய வான்வெளியைத் தவிர்ப்பதற்காக ஏர் இந்தியா விமானங்கள் ஐரோப்பாவிற்கு நீண்ட தூரம் பயணித்து சென்றதாக கூறப்படுகிறது. சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு உயர்மட்ட ஈரானிய ஜெனரல் மற்றும் ஆறு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். தனது தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தன் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக ஈரான் பார்க்கிறது.

இந்தியா 

இந்த வாரம் ஞாயிற்றுகிழமை இந்த தாக்குதல் நடத்தப்படலாம்

எனவே, ஹெஸ்புல்லா அமைப்பு போன்ற பயங்கரவாத அமைப்புகளை வைத்து தாக்குதல் நடத்தாமல், ஈரானே களமிறங்கி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் ஞாயிற்றுகிழமை இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறைகள் கூறியுள்ளன. இதற்கிடையில், இந்தியா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள், இஸ்ரேல் மற்றும் ஈரான் நாட்டுக்கு பயணம் செய்ய வேண்டாம் என தங்கள் குடிமக்களை எச்சரித்துள்ளன. இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரான் சீக்கிரமே இஸ்ரேலை தாக்க முயற்சிக்கும் என்று கூறியுள்ளார். "நாங்கள் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். நாங்கள் இஸ்ரேலை ஆதரிப்போம். இஸ்ரேலை பாதுகாக்க உதவுவோம். ஈரான் வெற்றிபெறாது" என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.