ஏர் இந்தியா ஊழியர்கள் மோசடி: இலவச டிக்கெட்டுகளை அந்நியர்களுக்கு விற்ற விவகாரம்!
செய்தி முன்னோட்டம்
ஏர் இந்தியா நிறுவனத்தின் 'பணியாளர் பயணக் கொள்கையை' (Employee Leisure Travel Policy) சுமார் 4,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தவறாகப் பயன்படுத்தியது அந்நிறுவனத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏர் இந்தியா ஊழியர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு (தாய், தந்தை, மனைவி) ஆண்டுக்கு 14 இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், பல ஊழியர்கள் உறவினர்கள் அல்லாதவர்களைத் தங்களது உறவினர்கள் எனக் கூறி, அந்த இலவச டிக்கெட்டுகளை வெளிநபர்களுக்குப் பணத்திற்காக விற்று லாபம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா
கடுமையான நடவடிக்கை:
இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 4,000 ஊழியர்களுக்கு ஏர் இந்தியா நிர்வாகம் தற்போது அபராதம் விதித்துள்ளது. மேலும், முறைகேடாகப் பெற்ற தொகையைத் திரும்பச் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற மோசடிகளைத் தவிர்க்க, இலவச டிக்கெட் கோரும் ஊழியர்கள் தங்களது உறவினர்களுக்கான முறையான ஆதாரங்களையும் (Proof of Relationship) சமர்ப்பிக்க வேண்டும் என விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஒரு நிறுவனத்தின் சலுகையைத் தவறாகப் பயன்படுத்தி, லாபம் ஈட்டிய ஊழியர்களின் இந்தச் செயல் ஏர் இந்தியா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.