இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யாவின் 'மிஸ்டர் எக்ஸ்' கதைக்களம் என்ன?
செய்தி முன்னோட்டம்
ஆர்யா நடிப்பில் ஏப்ரல் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் மனு ஆனந்த் பகிர்ந்துள்ளார். 'FIR' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இவர், இந்த படமும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட ஒரு ஸ்பை-த்ரில்லர் என உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' படத்தை போலவே, இந்தப் படத்திலும் நிஜ வாழ்க்கையில் நடந்த பல்வேறு உளவுத்துறை தொடர்பான சம்பவங்கள் கோர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இயக்குனர் கூறுகையில்,"துரந்தர் படத்தில் பணமதிப்பிழப்பு போன்ற நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல், நாங்களும் 2022-23 காலகட்டத்திலேயே இந்தியாவில் நடந்த சில முக்கியச் சம்பவங்களை மையமாக வைத்துத் திரைக்கதையை உருவாக்கினோம்" என்று தெரிவித்துள்ளார்.
கதைக்களம்
ஜேம்ஸ் பாண்ட் பாணி கதைக்களம்
இப்படத்தின் கரு உருவான விதம் குறித்து விளக்கிய இயக்குனர், 1960-களில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்தை போல தனக்கு தோன்றியதாகவும், அதையே கதையின் தொடக்கப்புள்ளியாக மாற்றியதாகவும் கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் எழுதப்பட்ட இந்தத் திரைக்கதை, உளவு தொடர்பான பல மர்மமான முடிச்சுகளை அவிழ்க்கும் விதமாக இருக்கும். இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து கௌதம் கார்த்திக் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியர், சரத்குமார், அனகா, அதுல்யா ரவி, ராய்சா வில்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தந்தை - மகன் பாசத்தையும், இரண்டு நபர்கள் ஒரு பொதுவான இலக்கை நோக்கிப் பயணிப்பதையும் இந்தப் படம் மையமாகக் கொண்டுள்ளது.