மீண்டும் திரையில் அண்ணன் - தங்கை பாசம்! விஜய்-த்ரிஷாவின் பிளாக்பஸ்டர் படம் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக இருந்து தற்போது தமிழக முதல்வராக இருக்கும் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படமான திருப்பாச்சி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், அன்றைய காலகட்டத்தில் குடும்ப ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. தற்போது இந்த திரைப்படம் மீண்டும் திரைக்கு வரவுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறுவெளியீடு
அக்டோபர் 1 ஆம் தேதி அதிகாரப்பூர்வ மறுவெளியீடு
சமீபகாலமாக பழைய வெற்றித் திரைப்படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் ட்ரெண்ட் அதிகரித்து வருகிறது.
அந்த வரிசையில், திருப்பாச்சி திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆ ம் தேதி உலகளவில் மறுவெளியீடு செய்யப்படும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய் தற்போது முதல்வராக உள்ள சூழலில், அவரது இந்த ஆல்டைம் பேவரைட் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருப்பது அவரது தீவிர ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
பாச கதைக்களம்
அண்ணன் - தங்கை பாசத்தைப் பேசிய கதைக்களம்
கிராமத்தில் இருந்து தங்கையின் திருமணத்திற்காக சென்னைக்கு வரும் அண்ணன், அவரது வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளைத் தீர்க்க எடுக்கும் அதிரடி அவதாரமே இப்படத்தின் முக்கிய கதையாகும்.
விஜய் - த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி, பசுபதி மற்றும் கோட்டா சீனிவாச ராவின் வில்லத்தனம், நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் தீனா இசையமைத்த பாடல்கள் ஆகியவை இப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.
குறிப்பாக அண்ணன் - தங்கை பாசம் குடும்ப ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
ரசிகர்கள்
புதிய தலைமுறை ரசிகர்களுக்கு சிறப்பு அனுபவம்
கில்லி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு வெளியான இந்த திரைப்படம், விஜய்யின் திரைப்பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
இந்த திரைப்படம் வெளியான காலத்தில் தியேட்டரில் பார்க்கத் தவறிய புதிய தலைமுறை ரசிகர்களுக்கு, இந்த மறுவெளியீடு ஒரு புதிய திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்.
அக்டோபர் 1-ம் தேதி படம் வெளியாகவுள்ளதை அடுத்து, திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள், பேனர்கள் மற்றும் பிரம்மாண்ட கொண்டாட்டங்களுக்கு ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.