விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் இணையத்தில் லீக் ஆனதன் பின்னணியில் இருந்த உதவி எடிட்டர் உட்பட 3 பேர் கைது
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய்யின் 69-வது திரைப்படமான 'ஜனநாயகன்' இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியான விவகாரத்தில், படக்குழுவை சேர்ந்த உதவி எடிட்டர் உட்பட மேலும் 3 பேரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். சைபர் கிரைம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், இணையத்தில் வெளியான வீடியோவை ஆய்வு செய்தபோது, அதில் 'எடிட்டிங் குறியீடுகள்' (Editing Watermarks) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் படத்தின் எடிட்டிங் பணிகளில் ஈடுபட்டவர்களைக் கண்காணித்தபோது, படத்தின் உதவி எடிட்டர் ஒருவரே இந்தப் படத்தை வெளியே கசியவிட்டது உறுதியானது. அவரோடு சேர்த்து மேலும் இரண்டு பேரைக் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
விசாரணை
விசாரணையில் வெளியான தகவல்கள்
கைது செய்யப்பட்ட உதவி எடிட்டர், எடிட்டிங் அறையில் இருந்த ஒரிஜினல் ஃபைலை தனது நண்பர்கள் மூலம் இணையத்தில் பரப்பியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போதும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீஸார் கருதுகின்றனர். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி, யாரும் எதிர்பாராத விதமாக 'ஜனநாயகன்' படத்தின் முழு நீளக்காட்சியும் இணையத்தில் வெளியானது. முதலில் சில நிமிடக் காட்சிகள் மட்டுமே கசிந்ததாக கருதப்பட்ட நிலையில், சுமார் 3 மணி நேர முழுப் படமும் டெலிகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த பட நிறுவனம், உடனடியாக சைபர் கிரைம் போலீஸில் புகாரளித்தது. இந்த பிரச்னையில் திரைத்துறையை சேர்ந்த பலரும் விஜய்க்கும் படக்குழுவிற்கும் ஆதரவை தெரிவித்தனர்.