நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது, காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், உடல்நிலை பாதிப்பால் டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்தார். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நடிகர் விஜயும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். அஞ்சலி செலுத்தி விட்டு மீண்டும் அவரது காரை நோக்கி சென்ற போது, நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்டது.
விஜய் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தால் பாதித்த ரசிகர்கள்
நடிகர் விஜய் மீது வீசப்பட்ட காலணி அவர் மீது படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் வருந்தியதாகவும் தகவல்கள் பரவியது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், விஜய் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் ரசிகர்களை கடுமையாக பாதித்துள்ளதாகவும், துக்க வீட்டில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.