
பிரபல வில்லன் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் உடலநலக்குறைவால் காலமானார்
செய்தி முன்னோட்டம்
பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) உடல்நலக்கோளாறால் காலமானார். அவருக்கு வயது 83. ஜூலை 10, 1942 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவில் பிறந்த கோட்டா ஸ்ரீனிவாச ராவ், 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனது பல்துறை நடிப்பிற்காக கொண்டாடப்பட்டார். 2003 ஆம் ஆண்டு வெளியான சாமி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததற்காக தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார். பின்னர் திருப்பாச்சி, குத்து, ஆயுதம் செய்வோம், கோ மற்றும் சகுனி போன்ற பிற தமிழ் படங்களில் நடித்து, தனது நடிப்புத் திறமையை மேலும் வெளிப்படுத்தினார். தெலுங்கு சினிமாவில் மறக்கமுடியாத குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து, கோட்டா ஸ்ரீனிவாச ராவ் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
டப்பிங் கலைஞர்
கலைத்துறையில் பன்முகத் திறமை
நடிப்பைத் தவிர, அவர் ஒரு பாடகராகவும், டப்பிங் கலைஞராகவும் இருந்தார், சினிமா துறையில் தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தினார். சினிமாவுக்கு அப்பால், கோட்டா ஸ்ரீனிவாச ராவ் 1999 முதல் 2004 வரை ஆந்திராவின் விஜயவாடா கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாகவும் பணியாற்றி, பொது சேவையிலும் ஈடுபட்டார். சமீபத்திய நாட்களில் உடல்நலக் குறைவால் போராடிய கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஹைதராபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். தென்னிந்திய சினிமாவுக்கு மறக்க முடியாத பங்களிப்பை வழங்கிய அவரது இழப்பிற்கு ரசிகர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.