LOADING...
பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் செங்குட்டுவன் உடல்நலக் குறைவால் காலமானார்
பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் செங்குட்டுவன் காலமானார்

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் செங்குட்டுவன் உடல்நலக் குறைவால் காலமானார்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 06, 2025
10:35 am

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமா மற்றும் ஆன்மிகத் துறையில் தனது பாடல்களால் முத்திரை பதித்த மூத்த கவிஞர் பூவை செங்குட்டுவன் (90), உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) காலமானார். சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி கிராமத்தில் பிறந்த இவரது இயற்பெயர் முருகவேல் காந்தி. நாடகங்கள் மீதான ஆர்வத்தால் தன் பெயரை செங்குட்டுவன் என மாற்றிக்கொண்டார். அவரது வாழ்க்கையில் `திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்` மற்றும் `நான் உங்கள் வீட்டுப் பிள்ளை` போன்ற பாடல்கள் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. குறிப்பாக, `கந்தன் கருணை` படத்திற்காக அவர் எழுதிய `திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்` என்ற பக்திப் பாடல், 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளது.

திருக்குறள்

திருக்குறளை இசை பாடல்களாக மாற்றினார்

குன்னக்குடி வைத்தியநாதனுடன் கொண்ட நட்பின் காரணமாக, அவர் பல நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். ஒருமுறை மனமுடைந்து தான் எழுதிய அனைத்தையும் அழிக்க முயன்றபோது, ஒரு பதிப்பாளர் அவரை அணுகி, அவரது படைப்புகளுக்குப் பணம் கொடுத்தது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, அவர் பக்திப் பாடல்களையும் அதிக அளவில் எழுதியுள்ளார். இவரது படைப்புகளில் முக்கியமானது, திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களையும் எளிய நடையில் இசைப் பாடல்களாக மாற்றியதாகும். குறள் தரும் பொருள் என்ற பெயரில் வெளியிட்ட இந்த இசைத் தொகுப்பைப் பாராட்டி, மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவருக்கு பாராட்டு மடல் அனுப்பினார். கலைமாமணி, கண்ணதாசன் விருது போன்ற பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.