Page Loader
இளையராஜாவின் அறிவுரையின் பேரில் நடிப்புக்கு இடைவெளிவிட்டதாக பாடகர் மனோ பேச்சு
இளையராஜா சொன்னதால் நடிக்கவில்லை: பாடகர் மனோ

இளையராஜாவின் அறிவுரையின் பேரில் நடிப்புக்கு இடைவெளிவிட்டதாக பாடகர் மனோ பேச்சு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 23, 2023
04:14 pm

செய்தி முன்னோட்டம்

'மிர்ச்சி' சிவா நடிப்பில், விக்னேஷ் ஷா பி. இயக்கத்தில் உருவாகியுள்ள படம், 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இந்த படத்தில், முக்கிய வேடத்தில் பாடகர் மனோ நடித்துள்ளார். படத்தின் ஸ்னீக் பீக் இந்த வாரம் வெளியானது. அதில் மனோவில் நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர். இந்நிலையில், படம் வெளியாவதற்கு முன், பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (பிப்.,22) நடந்தது. அதில், மனோவிடம், படத்தில் நடிப்பதில் இருந்து இடையில் எதற்காக ஒதுங்கி இருந்தார் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மனோ, "'சிங்காரவேலன்' படத்தில் நடித்த பிறகு இசைஞானி இளையராஜா என்னை அழைத்து, 'மீண்டும் நடிக்கச் சென்றால், உனக்காக பாட்டு காத்துக்கொண்டிருக்காது' என சொன்னார். இதற்குப் பிறகு நடிப்பின் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை" எனக்கூறினார்.

மனோ

சிங்காரவேலன் படப்பிடிப்பு தளத்தில் நடந்தவைகளை பகிர்ந்த மனோ

தொடர்ந்து இது பற்றி பேசிய மனோ, "தயாரிப்பாளர் குமாரிடமும், இயக்குனரிடமும் எப்போது நடிக்க முடியும் என்பதனை தெரிவித்து விடுவேன். அதற்கு ஏற்ப சமரசம் செய்து கொண்டு. என்னை நடிக்க வைத்தனர். கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு, இப்போது தான் மேடைக் கச்சேரிகளுக்கு வாய்ப்பு வருகிறது. அதனை தவறவிட மாட்டேன் என்று சொன்னவுடன், அதனையும் படக் குழுவினர் புரிந்து கொண்டு, எனக்கு கிடைத்த ஓய்வில் பயன்படுத்திக் கொண்டனர்" எனவும் தெரிவித்தார். "சிங்காரவேலன் படப்பிடிப்பின் போது, ஒருநாள் 15 நிமிடம் தாமதமாக சென்றேன். ஆனால் எனக்கு முன்னதாகவே கமல் வந்துவிட்டார். அதற்கு அடுத்த நாளிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு 1/2மணி நேரம் முன்னதாகவே சென்றேன். அதேபோல் இந்தப் படத்திலும் 1/2மணி நேரம் முன்னதாகவே சென்றுவிடுவேன்" எனக்கூறினார் மனோ.