
அனுமதியின்றி தனது பெயர், புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது என நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு
செய்தி முன்னோட்டம்
அனுமதியின்றி தன்னுடைய பெயர், புகைப்படங்களை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது எனக் கோரி நடிகை ஐஸ்வர்யா ராய், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது ஒப்புதல் இல்லாமல் நிறுவனங்கள் மற்றும் இணைய தளங்கள் தன் புகைப்படங்களைப் பயன்படுத்தி விளம்பர செயலில் ஈடுபடுவதாகவும், இது தனது தனியுரிமை மற்றும் விளம்பர உரிமைகளுக்கு எதிரானது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவின் (AI) மூலம் தனது உருவத்தைப் போலக் காட்சியளிக்கும் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் பரவி வருவதாகவும், சிலர் இவற்றை வணிக நோக்கத்தில் பயன்படுத்தி பணம் சம்பாதித்து வருகின்றனர் எனவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
இடைக்கால தடை
நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது
மனுவில், ஐஸ்வர்யா ராயின் படத்துடன் கூடிய வால் பேப்பர்கள் விற்பனை செய்யும் இணையதளங்கள், மற்றும் AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் வெளியிடும் யூடியூப் சேனல்கள் போன்றவை பட்டியலிடப்பட்டுள்ளன. வழக்கை விசாரித்த நீதிபதி எதிர்மனுதாரர்களை எச்சரிக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்க தீர்மானிக்கலாம் எனக் கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கு நவம்பர் 7ஆம் தேதி முன் இணைப்பதிவாளர் முன்னிலையிலும், பின்னர் ஜனவரி 15ஆம் தேதி விசாரணைக்காகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த வழக்கு பிரபலங்களின் உரிமைகள் மற்றும் AI பயன்படுத்தும் விதிமுறைகள் குறித்த முக்கியமான வழக்காகக் கருதப்படுகிறது.