சமந்தாவை தொடர்ந்து அமைச்சரின் கருத்திற்கு காட்டமான பதில் கூறிய ரகுல் ப்ரீத் சிங்
நடிகை ரகுல் ப்ரீத் சிங், தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா ஊடகத்தினருடன் பேசும்போது அரசியல் ஆதாயங்களுக்காக தனது பெயரை தவறாக பயன்படுத்தியதாகக் கூறி, "அரசியல் மைலேஜ் பெறுவதற்காக தனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம்" என காட்டமாக கூறியுள்ளார். நேற்று வியாழக்கிழமை சமூக ஊடக தளமான X இல், ரகுல் ப்ரீத் சிங் பதிவிட்ட ஒரு நீண்ட குறிப்பில் இதனைத்தெரிவித்துள்ளார். மேலும், தனது சகோதரத்துவப் பெண்களைப் பற்றி "ஆதாரமற்ற மற்றும் மோசமான வதந்திகள்" பரப்பப்படுவதைக் கேட்பது வேதனையளிக்கிறது என்றார். மேலும், ஒரு பொறுப்பான நிலையில் உள்ள மற்றொரு பெண் இத்தகைய கருத்துக்களை கூறியிருப்பது கூடுதல் அதிருப்தி அளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
Twitter Post
சர்ச்சையை தூண்டிய அமைச்சரின் கருத்துகள்
தெலங்கானா அமைச்சர் சுரேகா, முன்னாள் அமைச்சரும் பி.ஆர்.எஸ் தலைவருமான கே.டி.ஆரை தாக்கி பேசியபோது, நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோரின் விவாகரத்திற்கு அவர் தான் காரணம் என கூறினார். அதோடு, கே.டி.ஆர், நடிகர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாகவும், அதை வைத்து அவர்களை மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டினார். கூடவே, போதைப்பொருள் தொடர்பான பார்ட்டிகள், பெண் நடிகர்களை மிரட்டுவது போன்றவற்றில் கேடிஆர் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டினார். அதன் காரணமாகவே நடிகை ரகுல் ப்ரீத் சிங் சீக்கிரம் திருமணம் செய்து கொண்டதாகவும் சுரேகா கருத்து தெரிவித்தார். சுரேகாவின் கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது அவர் மீது KTR , நாகார்ஜூனா உள்ளிட்டவர்கள் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.