பிரபல யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் வழக்கு: திருநங்கை அப்சராவிற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
தமிழ் யூடியூபர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருப்பவர் ஜோ மைக்கேல் பிரவீன். இவர் அழகி போட்டிகள் உட்பட பல தனியார் நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். கூடுதலாக கடந்த சில ஆண்டுகளாக தனியார் யூடியூப் சேனல்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரெவ்யூ செய்து வருகிறார். அது மட்டுமின்றி, பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் போட்டியாளர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் பேட்டியெடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், திருநங்கையும், அதிமுக செய்தி தொடர்பாளரான அப்சரா ரெட்டி மீது இவர் அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. அப்சரா தொடுத்திருந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிமன்ற உத்தரவும்; ஜோ மைக்கேலின் பதிலும்
அப்சராவின் வழக்கில், ஜோ மைக்கேல் தன்னை பற்றி அவதூறாக பேசி வீடியோ பதிவேற்றினார் என்றும், அவற்றை நீக்கும்படி கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால், ஜோ மைக்கேலோ, வீடியோவை நீக்க முடியாது என நிராகரித்ததுடன் தொடர்ந்து அவதூறான பல விஷயங்களை பரப்பி வருகிறார் என குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கில் பதிலளிக்கும் படி ஜோ மைக்கிலுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர் தரப்பிலிருந்து யாருமே ஆஜராகாத நிலையில் "Ex- ParteOrder" படி ஜோ மைக்கேல் அப்சராவிற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஜோ தெரிவித்துள்ளார்.