'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை திரைப்படமாக எடுக்கிறார் 'காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குனர்
செய்தி முன்னோட்டம்
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' மற்றும் 'தி பெங்கால் ஃபைல்ஸ்' படங்களின் வெற்றியை தொடர்ந்து, பிரபல பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி மீண்டும் ஒரு தேசபக்தி மற்றும் ராணுவ நடவடிக்கை சார்ந்த திரைப்படத்தை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார். டைம்ஸ் நொவ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இது 'ஆபரேஷன் சிந்தூர்', இந்தியாவின் எல்லை தாண்டிய துல்லியத் தாக்குதல்களை மையமாக கொண்டு உருவாகிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்காக பிரபல தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ் அதிபர் பூஷன் குமாருடன் விவேக் அக்னிஹோத்ரி கைகோர்த்துள்ளார். விவேக்கின் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் படம் குறித்து ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னணி
ஆபரேஷன் சிந்தூர் பின்னணி
கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட கோரமான பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, மே 7 அன்று இந்திய ராணுவம் எல்லையை தாண்டி சென்று பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த ரகசிய ராணுவ நடவடிக்கைக்கு சூட்டப்பட்ட குறியீட்டு பெயர்தான் 'ஆபரேஷன் சிந்தூர்'. இந்த படத்தின் கதை இந்த நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் குறித்த விவரங்கள் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.