அகஸ்தியா தியேட்டரை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து வாங்கியதாக கூறப்பட்டது உண்மையா?
செய்தி முன்னோட்டம்
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக தண்டையார்பேட்டையில் இருக்கும் அகஸ்தியா திரையரங்கம் 1967-ல் திறக்கப்பட்டது.
இந்தத் திரையரங்கில் எம்ஜிஆர் - சிவாஜி கணேசன் திரைப்படங்கள் முதல் எண்ணற்ற படங்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா காலகட்டத்தில் கடும் நெருக்கடியை சந்தித்த திரையரங்கம் அதிலிருந்து மீளமுடியாமல் நிர்வாகம் திரையரங்கை மூடியது.
இந்த நிலையில், அகஸ்தியா திரையரங்கை நடிகை நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் வாங்கி இருப்பதாகவும் அதில் மல்டிபிளக்ஸ் கட்ட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
இதுபோன்ற தகவல்கள் வெளியான நிலையில் திரையரங்க நிர்வாகம் இது குறித்து விளக்கமளித்துள்ளது.
Nayanthara theatre
அகஸ்தியா தியேட்டர் நிர்வாகத்தின் விளக்கம்
"அகஸ்தியா தியேட்டர் தனிநபர் சொத்து கிடையாது. அகஸ்தியா அறக்கட்டளையின் கீழ்தான் இயங்கி வந்தது. அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் என்பதால் இதனை விற்கமுடியாது".
"ஏற்கனவே, மெட்ரோ பணிகளுக்காக கொஞ்சம் இடத்தை கொடுத்துவிட்டோம். மீதமுள்ள இடத்தில் சங்கரா நேத்ராலயாவுடன் இணைந்து மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கட்டவிருக்கிறோம்".
"உண்மையில் இதற்கான, ஒப்பந்தம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே போடப்பட்டுவிட்டது. அதனால், நயன்தாரா இந்த இடத்தை வாங்கிவிட்டார் என்று பரப்பப்படும் தகவல்களில் துளியும் உண்மை இல்லை".
"இதற்கான, பேச்சுவார்த்தைக்கூட நடக்கவில்லை. முழுக்க முழுக்க பொய்யான தகவல் இது. பொதுமக்கள் நம்பவேண்டாம்." என்று திரையரங்க நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.