Page Loader
"ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன்தான்": பாடல்கள் காப்புரிமை வழக்கில் இளையராஜா கொடுத்த 'பதில்'
பாடல்களைப் பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி போன்ற இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன

"ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன்தான்": பாடல்கள் காப்புரிமை வழக்கில் இளையராஜா கொடுத்த 'பதில்'

எழுதியவர் Venkatalakshmi V
Apr 11, 2024
09:26 am

செய்தி முன்னோட்டம்

இளையராஜாவின் பாடல்கள் காப்புரிமை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த வாதத்தில், இசை நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "அனைவரையும் விட தான் மேலானவர் என இசையமைப்பாளர் இளையராஜா நினைக்கிறார்" எனக்கூறியதற்கு, இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,"ஆம், நான் எல்லோருக்கும் மேலானவன் தான். வீம்புக்காக இதனைச் சொல்வதாக நினைக்க வேண்டாம்" என பதிலளித்துள்ளார். இசைஞானி இளையராஜா பல்லாயிரக்கணக்கான பாடல்களை இசையமைத்துள்ளார். அதில், கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 500 பாடல்களைப் பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி போன்ற இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால் ஒப்பந்தகாலம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, இளையராஜா உயர்நீதிமன்றத்தில் சில வருடங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

காப்புரிமை 

காப்புரிமை வழக்கில் இசை நிறுவனங்கள் மேல்முறையீடு

முன்னதாக இந்த காப்புரிமை வழக்கில், தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று, இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதாகவும், இளையராஜாவுக்கு இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து மேல்முறையீடு செய்தார் இளையராஜா. வழக்கின் விசாரணை காலத்தில், இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தான், இசை நிறுவனங்கள், படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களைப் பயன்படுத்த அதிகாரம் இருப்பதாக மனுத்தாக்கல் செய்தது.

ராயல்டி

தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றதும் உரிமைகளை இழக்கும் இசையமைப்பாளர்கள்

நேற்று நடந்த இந்த வழக்கின் விசாரணையில், அப்போது, இசை நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாரயண், இந்தியத் திரைப்படத்துறையில் உள்ள இசையமைப்பாளர்கள், ஒரு குறிப்பிட்ட திரைப்படத்திற்காக ஒரு திரைப்பட தயாரிப்பாளரிடமிருந்து ஊதியம் பெற்றவுடன், அனைத்து உரிமைகளையும் இழந்து விடுவதாகத் தெரிவித்தார். எனவே, காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜாவை கருத முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என்று தன்னை நினைப்பதாகக் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சதீஷ் பராசரன், "ஆம், நான் எல்லோருக்கும் மேலானவன் தான் எனவும் வீம்புக்காக இதனைச் சொல்வதாக நினைக்க வேண்டாம்" என தெரிவித்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

embed

பாடல்கள் காப்புரிமை வழக்கு

#JUSTIN | "ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன்தான்" - பாடல்கள் காப்புரிமை வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா தரப்பு பதில் இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி ஆகிய இசை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில்... pic.twitter.com/LH3kzziZw6— Sun News (@sunnewstamil) April 10, 2024