
இந்தியாவின் முதல் மனநல தூதராக நடிகை தீபிகா படுகோனை நியமனம் செய்தது மத்திய சுகாதார அமைச்சகம்
செய்தி முன்னோட்டம்
நாட்டின் மனநல ஆதரவு அமைப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW), நடிகையும் மனநல ஆர்வலருமான தீபிகா படுகோனை இந்தியாவின் முதலாவது மனநலத் தூதராக நியமித்துள்ளது. தனது சொந்த அனுபவங்கள் மற்றும் தி லைவ் லவ் லாஃப் (LLL) அறக்கட்டளை மூலம் மனநல உரையாடல்களை முன்னெடுத்துச் செல்வதில் தீபிகா படுகோன் ஆற்றிய தீவிரப் பங்கின் காரணமாகவே அவர் இந்த பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பேசுகையில், இந்தக் கூட்டிணைவு இந்தியாவில் மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்பவும், களங்கத்தைக் குறைக்கவும், மனநலத்தை மக்கள் ஆரோக்கியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக முன்னிலைப்படுத்தவும் உதவும் என்று தெரிவித்தார்.
அரசாங்க திட்டங்கள்
அரசாங்க திட்டங்களை ஊக்குவிக்க திட்டம்
தனது புதிய பொறுப்பு குறித்துப் பேசிய தீபிகா படுகோன், மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து பொதுமக்களுக்குக் கல்வி கற்பிக்கவும், களங்கத்தைப் போக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும், டெலி மனஸ் (Tele MANAS) போன்ற அரசாங்கத் திட்டங்களை ஊக்குவிக்கவும் செயல்படவுள்ளதாகத் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மனநலப் பாதுகாப்பிற்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் மனநலப் பாதுகாப்பின் எதிர்காலம், அறிவியல் அணுகுமுறையுடன் யோகா மற்றும் தியானம் போன்ற இந்தியப் பாரம்பரியங்களை இணைப்பதில் உள்ளது என்று முன்னர் தீபிகா படுகோன் வலியுறுத்தினார். மனநலம் குறித்த விழிப்புணர்வு ஒரு நாள் கல்லி கிரிக்கெட்டைப் போலப் பரவலாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.