விஜயகாந்த் மகன் ஷண்முகப்பாண்டியனுக்கு உதவ முன் வந்த ராகவா லாரன்ஸ்
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான 'கேப்டன்' விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி காலமானார். அவரின் மறைவு தமிழ் திரையுலகினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. தலைநகரே திணறும் அளவிற்கு, பல ஊர்களில் இருந்து அவரது இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள பலரும் வந்தனர். அதுமட்டுமின்றி, இன்றளவும் அவரது சமாதியை காண, நூற்றுக்கணக்கானோர் தேமுதிக அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். கேப்டனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாத பல திரை நட்சத்திரங்கள், விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாரிடம் ஆறுதல் கூறி வருகின்றனர்.
ஷண்முக பாண்டியனுக்காக வாய்ப்பு கேட்கும் ராகவா லாரன்ஸ்
அந்த வகையில், ராகவா லாரன்ஸ், பிரேமலதா மற்றும் விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் ஷண்முகப்பாண்டியன் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அப்போது பிரேமலதாவின் சகோதரி அவரிடம், 'ஷண்முகப் பாண்டியனை நீங்கதான் பார்த்துக் கொள்ள வேண்டும்' என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தற்போது ராகவா லாரன்ஸ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,"கேப்டன் விஜயகாந்தால் தமிழ் திரையுலகில் எத்தனையோ இளம் நடிகர்களுக்கு உதவி இருக்கிறார். அதனால் அவரின் மகனுக்கு என்னால் முடிந்த உதவியாக அவர் நடிக்கும் படத்தின் புரமோஷனுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யப்போகிறேன். அவர் நடிக்கும் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க அழைத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். டபுள் ஹீரோ கதையில் அவருடன் நடிக்கவும் தயாராக உள்ளேன்" என கூறியுள்ளார்.