LOADING...
5ஜி வேகத்தை அதிகரிக்க நிதிச் சலுகை வேணும்! மத்திய பட்ஜெட்டில் டெலிகாம் நிறுவனங்கள் எதிர்பார்ப்பது என்ன?
பட்ஜெட் 2026இல் மத்திய அரசுக்கு டெலிகாம் நிறுவனங்கள் விடுக்கும் கோரிக்கைகள்

5ஜி வேகத்தை அதிகரிக்க நிதிச் சலுகை வேணும்! மத்திய பட்ஜெட்டில் டெலிகாம் நிறுவனங்கள் எதிர்பார்ப்பது என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Jan 29, 2026
04:08 pm

செய்தி முன்னோட்டம்

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றின் கூட்டமைப்பான COAI (Cellular Operators Association of India), நிதி நெருக்கடியைக் குறைக்கப் பல முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. 5ஜி விரிவாக்கம் மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பங்களுக்கு அதிக முதலீடு தேவைப்படுவதால், தற்போதைய வரிச் சுமைகளைத் தளர்த்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கட்டணம்

உரிமக் கட்டணக் குறைப்பு

தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை அரசுக்குக் கட்டணமாக வழங்குகின்றன. நிறுவனங்கள் 3% உரிமக் கட்டணமாகவும், 5% டிஜிட்டல் பாரத் நிதிக்கும் என மொத்தம் 8% செலுத்துகின்றன. நிர்வாகச் செலவுகளை மட்டும் ஈடுகட்டும் வகையில், உரிமக் கட்டணத்தை 0.5% முதல் 1% வரை குறைக்க வேண்டும் என்று COAI கோரியுள்ளது. டிஜிட்டல் பாரத் நிதியில் ஏற்கனவே பயன்படுத்தப்படாத அதிகப்படியான தொகை இருப்பதால், அதற்கான பங்களிப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கையில் புழங்கும் பணத்தை அதிகரிக்க ஜிஎஸ்டியில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன: விலக்கு கோரிக்கை: உரிமக் கட்டணம், ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும். வரி விகிதக் குறைப்பு: மாற்றாக, இந்தத் தொகைகளுக்கான ஜிஎஸ்டி வரியை 18%லிருந்து 5%ஆகக் குறைக்க வேண்டும். பயன்படுத்தப்படாத வரிக் கடன்: ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் மூலம் நிறுவனங்களிடம் அதிகப்படியான இன்புட் டேக்ஸ் கிரெடிட் தேங்கியுள்ளது. இதைப் பயன்படுத்தி மற்ற வரிப் பொறுப்புகளைச் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர்.

Advertisement

விலை

ஸ்பெக்ட்ரம் விலை மாற்றங்கள்

தொலைத்தொடர்பு என்பது இப்போது வெறும் சேவை மட்டுமல்ல, அது சுகாதாரம், கல்வி மற்றும் நிதித் துறை போன்ற அனைத்துத் துறைகளுக்கும் அடிப்படையான ஒன்றாக மாறிவிட்டது. எனவே, ஸ்பெக்ட்ரம் விலையை உலகளாவிய தரத்திற்கு ஏற்பக் குறைப்பதன் மூலம் மட்டுமே டிஜிட்டல் இந்தியா கனவை முழுமையாக எட்ட முடியும் என்று COAI இயக்குநர் ஜெனரல் எஸ்.பி.கோச்சார் தெரிவித்துள்ளார்.

Advertisement