ஹோம் லோனை சீக்கிரமே கட்டி முடிக்க போறீங்களா? வட்டி சுமையைக் குறைக்கும் ப்ரீபேமென்ட்; உண்மை நிலவரம் என்ன?
செய்தி முன்னோட்டம்
சொந்த வீடு என்ற கனவை நனவாக்கப் பெரும்பாலான மக்கள் தேர்ந்தெடுப்பது வீட்டுக் கடன்களைத்தான். வழக்கமாக 20 ஆண்டுகள் வரையிலான நீண்ட கால அவகாசத்தில் இந்த கடன்கள் வாங்கப்பட்டாலும், வாங்குபவர்கள் இதனை விரைவாகவே கட்டி முடிக்க விரும்புகிறார்கள். இதற்கு பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த முறைதான் ப்ரீபேமென்ட் அல்லது கடனை முன்கூட்டியே செலுத்துவதாகும். தவணைக்காலம் முடியும் முன்பே குறிப்பிட்ட ஒரு பெரிய தொகையை செலுத்தி கடன் காலத்தைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.
இஎம்ஐ
இஎம்ஐ கணக்கீடும் வட்டி சேமிப்பும்
நீங்கள் செலுத்தும் மாதாந்திர தவணையில் அசல் மற்றும் வட்டி என இரண்டு பகுதிகள் உள்ளன.
கடனின் ஆரம்ப ஆண்டுகளில் நீங்கள் செலுத்தும் இஎம்ஐயில் பெரும்பாலான பகுதி வட்டிக்கே செல்லும், அசல் தொகை மிகக் குறைவாகவே குறையும்.
எனவே, கடனின் தொடக்கக் காலங்களிலேயே மொத்தமாக ஒரு தொகையை முன்கூட்டியே செலுத்தும் போது, அது நேரடியாக உங்களின் அசல் தொகையைக் குறைத்து, எதிர்காலத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி சுமையை பெருமளவில் குறைக்கிறது.
உதாரணம்
ஒரு எளிய உதாரணம் மூலம் விளக்கம்
உதாரணத்திற்கு, நீங்கள் ரூ. 45 லட்சத்தை 8.5% வட்டி விகிதத்தில் 20 ஆண்டுகளுக்கு கடனாகப் பெறுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.
தொடக்கக் காலத்தில் ரூ. 5 லட்சத்தை முன்கூட்டியே செலுத்தும் போது, உங்களின் மொத்த அசல் நிலுவை ரூ. 40 லட்சமாகக் குறையும்.
இனி வரும் மாதங்களுக்கான வட்டியானது இந்த ரூ. 40 லட்சத்திற்கு மட்டுமே கணக்கிடப்படும்.
இதனால் வங்கிக்கு நீங்கள் செலுத்த வேண்டிய வட்டித் தொகையில் பல லட்சம் ரூபாய் வரை உங்களால் சேமிக்க முடியும்.
விதிகள்
முன்கூட்டியே செலுத்துவதற்கான கட்டணங்கள் மற்றும் விதிகள்
மிதக்கும் வட்டி விகிதத்தில் (Floating Rate) பெறப்படும் வீட்டுக் கடன்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தும்போது அபராதக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ஆனால், தனிநபர் கடன் அல்லது நிலையான வட்டி விகித கடன்களுக்கு வங்கிகள் குறிப்பிட்ட தொகையை அபராதமாக வசூலிக்கக் கூடும்.
மேலும், சில கடன்களில் முதல் 6 முதல் 12 மாதங்கள் வரை முன்கூட்டியே பணம் செலுத்த முடியாத லாக்-இன் காலமும் இருக்கும்.
எப்போது லாபம்?
எந்தக் காலத்தில் செலுத்துவது அதிக லாபம்?
வீட்டுக் கடனின் முதல் பாதியில் முன்கூட்டியே பணம் செலுத்துவது அதிகப்படியான நிதி நன்மையைத் தரும்.
ஏனெனில், கடன் காலத்தின் தொடக்கத்தில் வட்டிப் பங்கு அதிகமாக இருக்கும்போது அசல் தொகையைக் குறைப்பது எதிர்கால வட்டிச் சுமையை கனிசமாகக் குறைக்கும்.
உங்களின் கடன் ஒப்பந்தத்தில் உள்ள விதிகளை சரியாகப் புரிந்துகொண்டு, உங்களிடம் இருக்கும் உபரிப் பணத்தை முன்கூட்டியே செலுத்துவது கடன் இல்லா நிம்மதியான வாழ்விற்கு வழிவகுக்கும்.