அரிசி ஏற்றுமதியை தடை செய்திருக்கும் இந்தியா.. உலகளவில் உயரும் அரிசி விலை!
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு கடந்த ஜூலை 21ம் தேதியன்று தடை விதித்து அறிவித்தது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வெள்ளை அரிசியின் ஏற்றுமதி அதிரடியாக நிறுத்தப்பட்டது. அரிசி ஏற்றுமதியின் மீது இந்திய அரசு தடை விதித்து ஆறு வாரங்களைக் கடந்திருக்கும் நிலையில், உலகில் அரிசியை பிரதானமாக எடுத்தும் கொள்ளும் மற்றும் அரிசியை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் அரிசியின் விலை 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வைச் சந்தித்திருக்கிறது. பாஸ்மதி அல்லாத வெள்ளி அரிசியை, பிற அரிசியின் பெயர்களில் சட்டத்திற்குப் புறம்பாக ஏற்றுமதி செய்வதைத் தடுக்க, புழுங்கல் அரிசி மற்றும் பாஸ்மதி அரிசியின் மீது 20% ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டிருக்கிறது.
உலக நாடுகளின் நடவடிக்கை:
பிற அரிசி வகைகள் மீதான கூடுதல் ஏற்றுமதி வரியானது, மற்ற நாடுகளில் அரிசி விலையில் மேலும் அழுத்தத்தைக் கூட்டியிருக்கிறது. ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் அரிசி விளைச்சல் குறைந்திருக்கும் நிலையில், எல் நினோவால் 2024ம் ஆண்டு தொடக்கத்தில் மேலும் கூடுதலான வறட்சி நிலவும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால், வரும் மாதங்களில் ஆசிய நாடுகளில் அரிசியின் விளைச்சல் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரிசி ஏற்றுமதி மீது தடை விதித்திருப்பதைக் கடந்து இன்னும் டெல்லியின் அரிசியின் விலை குறையவில்லை. ஆனால், அதன் விலை உயராமல் அதே ரூ.39ல் நிலைகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பைப் பயன்படுத்தும் தாய்லாந்து:
விளைச்சல் குறைவாக இருப்பதைக் கடந்து, அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதும் இந்தியாவில் அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்ததற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் சமயத்தில் முக்கிய உணவின் விலை உயர்வை மக்கள் சாதாரணமாக எடுத்தக் கொள்ள மாட்டர்கள். மேலும், அது தேர்தலிலும் எதிரொளிக்கும் என்பதனாலேயே அரிசியின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் இந்த முடிவைத் தொடர்ந்து, உலகின் இரண்டாவது முன்னணி அரிசி ஏற்றுமதியாளரான தாய்லாந்து பிற நாடுகளுடன் வணிகத் தொடர்பை வலுப்படுத்த முயற்சித்து வருகிறது. தாய்லாந்து அதிகாரிகள், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேசியா மற்றும் ஜப்பான ஆகிய நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி குறித்து உரையாடுவதற்காக பயணம் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அரிசி ஏற்றுமதி தடையில் இருந்து விலக்கு கோரும் நாடுகள்:
உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் வியட்நாமும், சாதாரணமாகத் தாங்கள் ஏற்றுமதி செய்வதை விட சற்றுக் கூடுதலான அரிசியை ஏற்றுமதி செய்து வருகின்றனர். தங்கள் நாட்டு அரிசித் தேவை பாதிக்கப்படாமல், எவ்வளவு கூடுதலான அரிசியை ஏற்றுமதி செய்ய முடியுமோ, அந்தளவிற்குக் கூடுதலான அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது வியட்நாம். இதற்கிடையில் அரிசி ஏற்றுமதித் தடையிலிருந்து தங்கள் நாட்டிற்கு விலக்கு அளிக்கும்படி, சிங்கப்பூர், மொரீஷியஸ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்து, அந்நாடுகளுக்கு விலக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. அரிசி ஏற்றுமதி குறித்து உரையாட கினியா நாட்டின் வர்த்தக அமைச்சர் இந்தியாவிற்கு பயணமும் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.