"ஓய்வூதியத்தோடு மருத்துவப் பாதுகாப்பும்!" NPS ஸ்வஸ்த்யா திட்டத்தில் இணைவது எப்படி? முழு வழிகாட்டி
செய்தி முன்னோட்டம்
இந்திய ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), கடந்த ஜனவரி 2026இல் அறிமுகப்படுத்தப்பட்ட NPS ஸ்வஸ்த்யா ஓய்வூதியத் திட்டத்தின் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டத்திற்கான (PoC 2) திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் ஓய்வூதிய சேமிப்புடன் சேர்த்து, சந்தாதாரர்களுக்குத் தேவையான மருத்துவச் செலவுகளுக்கான நிதி உதவியையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு அடிப்படையிலான திட்டமாகும். இந்தியக் குடிமக்கள் எவர் வேண்டுமானாலும் இதில் இணைந்து பயன்பெறலாம். குறிப்பாக, இத்திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீடு பெறுவது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பதிவு முறைகள்
கட்டாய மருத்துவப் பலன்கள் மற்றும் பதிவு முறைகள்
புதிய விதிமுறைகளின்படி, இந்தத் திட்டத்தில் இணையும் சந்தாதாரர்களுக்கு மருத்துவக் காப்பீடு என்பது கட்டாயமாகும். இதற்கான பிரீமியம் தொகையானது, சந்தாதாரரின் NPS ஸ்வஸ்த்யா கணக்கிலிருந்து பகுதி வித்ட்ராயல் (Partial Withdrawal) முறையில் கழிக்கப்படும். இத்திட்டத்தில் இணைவதற்கு ஆரம்பக்கட்ட குறைந்தபட்ச முதலீடாக 25,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை செலுத்திய உடனேயே சந்தாதாரர்கள் திட்டத்தின் பலன்களைப் பெறத் தகுதி உடையவர்களாக மாறுவார்கள். காப்பீட்டு பாலிசியின் விதிமுறைகள், விலக்குகள் மற்றும் க்ளைம் செய்யும் முறைகள் குறித்துச் சந்தாதாரர்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று PFRDA வலியுறுத்தியுள்ளது.
மருத்துவ அவசரநிலை
மருத்துவ அவசரநிலை மற்றும் முன்கூட்டியே வெளியேறும் வசதி
NPS ஸ்வஸ்த்யா திட்டத்தின் ஒரு சிறப்பம்சமே அதன் நெகிழ்வுத்தன்மைதான். ஒரு சந்தாதாரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதற்கான செலவு அவர் பகுதி வித்ட்ராயல் செய்யத் தகுதியான வரம்பைத் தாண்டினால், அவர் தனது கணக்கில் உள்ள மொத்தத் தொகையையும் (100% Lump sum) எடுத்துச் செலவிட அனுமதிக்கப்படுவார். இந்தத் தொகை நேரடியாகச் சம்பந்தப்பட்ட மருத்துவமனை அல்லது காப்பீட்டு நிறுவனத்திற்கு (HBA/TPA) வழங்கப்படும். மருத்துவச் செலவுகள் போக மீதமுள்ள தொகை, சந்தாதாரரின் பொதுவான திட்டக் கணக்கிற்கு (Common Scheme Account) மாற்றப்படும். இது அவசரக் காலங்களில் நிதி நெருக்கடியைத் தவிர்க்க உதவும் ஒரு முக்கிய வசதியாகும்.
விதிமுறைகள்
நிதிப் பரிமாற்றம் மற்றும் வித்ட்ராயல் விதிமுறைகள்
40 வயதிற்கு மேற்பட்ட சந்தாதாரர்கள் (அரசு ஊழியர்கள் தவிர்த்து), தங்களது பொதுவான NPS கணக்கிலிருந்து 30 சதவீதம் வரையிலான தொகையை இந்த ஸ்வஸ்த்யா கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம். மேலும், வெளிப்புற நோயாளி (Outpatient) அல்லது உள்நோயாளி (Inpatient) மருத்துவச் செலவுகளுக்காகச் சந்தாதாரர் தனது பங்களிப்பில் 25 சதவீதம் வரை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு எவ்வித காத்திருப்பு காலமும் கிடையாது. இருப்பினும், முதல் முறையாகப் பணத்தை எடுப்பதற்கு முன்பு, கணக்கில் குறைந்தபட்சம் 50,000 ரூபாய் இருப்பு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.