LOADING...
ஒரே நாளில் ரூ.4 லட்சம் கோடி காலி? சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி; பீதியில் முதலீட்டாளர்கள்
சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு

ஒரே நாளில் ரூ.4 லட்சம் கோடி காலி? சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி; பீதியில் முதலீட்டாளர்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 13, 2026
01:37 pm

செய்தி முன்னோட்டம்

வாரத்தின் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) இந்தியப் பங்குச் சந்தை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வர்த்தகத் தொடக்கத்திலேயே மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 82,771 என்ற நிலையை அடைந்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 50, சுமார் 300 புள்ளிகள் வரை சரிந்து 25,650 க்கும் கீழ் சென்றது. வங்கி நிஃப்டியும் 370 புள்ளிகளுக்கு மேல் சரிவைக் கண்டது. இந்தத் திடீர் சரிவிற்கான முக்கிய காரணங்களை நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.

ஐடி துறை

ஐடி துறை பங்குகளின் வீழ்ச்சி

பங்குச் சந்தை சரிவிற்கு மிக முக்கியமான காரணமாக ஐடி பங்குகளின் விற்பனை பார்க்கப்படுகிறது. அமெரிக்கத் தொழில்நுட்பப் பங்குகள் சரிந்ததைத் தொடர்ந்து, இந்திய ஐடி பங்குகளும் 7.5% வரை வீழ்ச்சியடைந்தன. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், மனித உழைப்பை அதிகம் நம்பியுள்ள இந்திய ஐடி நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சி பாதிக்குமோ என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது. இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி குறியீட்டில் ஐடி பங்குகள் 10% பங்களிப்பைக் கொண்டிருப்பதால், ஒட்டுமொத்த சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது.

கவலை

அமெரிக்க சிபிஐ (CPI) தரவு குறித்த கவலை

இன்று இரவு அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடு (CPI) எனப்படும் பணவீக்கத் தரவுகள் வெளியாக உள்ளன. இந்தத் தரவுகளின் அடிப்படையில் தான் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்குமா என்பது தெரியும். வட்டி விகிதம் குறையாது என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், இந்திய சந்தை அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால், ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் இன்று தங்கள் பங்குகளை விற்று வெளியேறினர்.

Advertisement

லாபம்

லாபப் பதிவு

பிப்ரவரி முதல் வாரத்தில் இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, இந்தியச் சந்தை 1.5% மேல் உயர்ந்தது. "இந்த ஒப்பந்தத்தின் பலன்கள் தரைமட்டத்தில் எதிரொலிக்க இன்னும் 6 முதல் 9 மாதங்கள் ஆகும். எனவே, கடந்த வார உயர்வைப் பயன்படுத்தி முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுத்துள்ளனர்." என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

ஒப்பந்தம்

இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் சவால்கள்

இந்த வர்த்தக ஒப்பந்தம் ஒருபுறம் சாதகமாக இருந்தாலும், மறுபுறம் சில சிக்கல்களையும் கொண்டுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்கா மற்றும் சீனாவைச் சார்ந்தே உள்ளது. இந்த இரு நாடுகளும் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள நிலையில், இரண்டு நாடுகளுடனும் சமநிலையைப் பேணுவது இந்தியாவிற்குச் சவாலாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கூடுதலாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகத்தில் 0.10% சரிந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ள நிலையில், ரூபாயின் மதிப்பில் ஏற்படும் இந்த ஏற்ற இறக்கம் அவர்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது.

Advertisement