LOADING...
அக்டோபரில் பெட்ரோல் பயன்பாடு 7% அதிகரிப்பு; எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டால் டீசல் விற்பனை சரிவு
அக்டோபரில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டால் டீசல் விற்பனை சரிவு

அக்டோபரில் பெட்ரோல் பயன்பாடு 7% அதிகரிப்பு; எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டால் டீசல் விற்பனை சரிவு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 02, 2025
06:49 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய எண்ணெய் அமைச்சகத்தின் சமீபத்தியத் தரவுகளின்படி, பண்டிகைக் காலத்தின் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் நுகர்வு அக்டோபர் மாதத்தில் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 7.03% உயர்ந்து, 3.65 மில்லியன் டன்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பண்டிகைக் காலத்தில் இரு சக்கர மற்றும் பயணிகள் வாகனங்களின் விற்பனை அதிகரித்தது, தனிப்பட்ட பயணங்கள் மற்றும் வாகனப் பயன்பாடு ஆகியவை பெட்ரோல் விற்பனை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. இருப்பினும், நாட்டின் அதிகபட்சமாக நுகரப்படும் எரிபொருளான டீசலின் விற்பனை, அக்டோபரில் 0.48% சரிந்து 7.6 மில்லியன் டன்களாகப் பதிவாகியுள்ளது. டீசல் தேவை பொதுவாக லாரிகள், வணிகப் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் விவசாய எந்திரங்களால் இயக்கப்படுகிறது.

டீசல்

டீசல் தேவை

பெட்ரோல் தேவை அதிகரித்தாலும், பொதுப் போக்குவரத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதால், டீசல் தேவை குறைந்துள்ளது. மற்ற எரிபொருட்களின் விற்பனை அக்டோபரில் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. பண்டிகைக் காலப் பயணத்தின் காரணமாக விமானப் போக்குவரத்து எரிபொருள் (ATF) விற்பனை 1.57% உயர்ந்து 7.69 மில்லியன் டன்களாக உள்ளது. இதேபோல், வீட்டுத் தேவையின் அதிகரிப்பால் சமையல் எரிவாயுவின் (LPG) நுகர்வு 5.42% அதிகரித்து 2.94 மில்லியன் டன்களை எட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில், பெட்ரோல் நுகர்வு 6.79% ஆகவும், சமையல் எரிவாயு விற்பனை 7.18% ஆகவும் வலுவாக உள்ளது. அதே காலகட்டத்தில், டீசல் மற்றும் ATF தேவைகள் முறையே 2.45% மற்றும் 1.03% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.