சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தடுக்க புதிய நடவடிக்கை! எல்பிஜி உற்பத்தியை இரட்டிப்பாக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, பொது மற்றும் தனியார் துறை சுத்திகரிப்பு ஆலைகளுக்கு மத்திய அரசு அதிகபட்ச எல்பிஜி உற்பத்தி இலக்குகளை நிர்ணயித்துள்ளது. மேற்கு ஆசியப் பகுதியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்கள் காரணமாக இறக்குமதி சமையல் எரிவாயு விநியோகத்தில் சிக்கல்கள் எழுந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டிலேயே போதிய எரிவாயு இருப்பை உருவாக்க மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
இலக்கு
நாளொன்றுக்கு 63,810 டன்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம்
நாட்டிலுள்ள 21 சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த அதிகபட்ச உற்பத்தி அளவுகள் தனித்தனியாக வகுத்து வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த எல்பிஜி உற்பத்தி திறன் நாளொன்றுக்கு 63,810 டன்களாக உயரும்.
இது 2026 மார்ச் 31 உடன் முடிவடைந்த நிதியாண்டின் உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் இரட்டிப்பாகும்.
மேலும், இது நாட்டின் ஒட்டுமொத்த தினசரி சமையல் எரிவாயு நுகர்வில் சுமார் 70 சதவீத தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களிப்பு
ரிலையன்ஸ் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்திப் பங்களிப்பு
மத்திய அரசின் இந்தத் திட்டத்தில் தனியார் துறையைச் சேர்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பழைய சுத்திகரிப்பு ஆலைக்கு மிகப்பெரிய உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆலை நாளொன்றுக்கு 18,000 டன்கள் வரை எல்பிஜி உற்பத்தி செய்ய வேண்டும்.
அதேபோன்று, அரசுக்கு சொந்தமான 18 பொதுத்துறை சுத்திகரிப்பு ஆலைகள் அனைத்தும் இணைந்து கூட்டு முயற்சியாக நாளொன்றுக்கு மொத்தம் 31,470 டன்கள் எல்பிஜி சமையல் எரிவாயுவை உற்பத்தி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இறக்குமதி சார்பு
இறக்குமதி சார்ந்திருப்பைக் குறைக்கவும் தட்டுப்பாட்டைத் தடுக்கவும் நடவடிக்கை
கடந்த 2025-26 நிதியாண்டில் இந்தியா 33.2 மில்லியன் டன்கள் எல்பிஜியை பயன்படுத்தி உள்ளது.
இதில் 64 சதவீதத்திற்கும் அதிகமான அளவு (21.3 மில்லியன் டன்கள்) சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டது.
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தில் ஏற்பட்ட முடக்கத்தால் இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில், பெட்ரோ கெமிக்கல் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயுவை திசைதிருப்பி எல்பிஜி உற்பத்தியைப் பெருக்க சுத்திகரிப்பு ஆலைகளுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
உற்பத்தி அட்டவணை
அரையாண்டு தோறும் மாற்றியமைக்கப்படும் புதிய உற்பத்தி அட்டவணை
நாட்டில் சமையல் எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு அல்லது தடங்கல்கள் ஏற்படும் நேரங்களில் இந்த புதிய உற்பத்தி வரம்புகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், நாட்டின் தேவை மற்றும் சர்வதேச சூழலுக்கு ஏற்ப இந்த உற்பத்தி அட்டவணையை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மத்திய அரசு ஆய்வு செய்து புதுப்பிக்கும்.
இதன் மூலம் இந்திய சமையல் எரிவாயு சந்தை வெளிநாட்டுச் சிக்கல்களால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பான நிலையை அடையும்.