Loading...
பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகம்: ரூ.10, ரூ.20 பாலிமர் ரூபாய் நோட்டுகளுக்கு அரசு ஒப்புதல்
தலா 100 கோடி பாலிமர் நோட்டுகள் முதற்கட்ட கள ஆய்விற்காக அச்சிடப்பட உள்ளன

பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகம்: ரூ.10, ரூ.20 பாலிமர் ரூபாய் நோட்டுகளுக்கு அரசு ஒப்புதல்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 11, 2026
04:31 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் விரைவில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான பாலிமர் (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகளை முதற்கட்ட சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்திற்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலங்களவையில் எழுதப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கியின்(RBI) மத்திய வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில், 1934-ஆம் ஆண்டைய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 25-ன் கீழ் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். இதன்படி, தலா 100 கோடி பாலிமர் நோட்டுகள் முதற்கட்ட கள ஆய்விற்காக அச்சிடப்பட உள்ளன. தற்போது இதற்கான கொள்முதல் பணிகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், பாலிமர் நோட்டுகளை அறிமுகப்படுத்துவதற்கான துல்லியமான காலக்கெடு உடனடியாக நிர்ணயிக்க முடியாது என RBI தெளிவுபடுத்தியுள்ளது.

நன்மை

பாலிமர் நோட்டுகளின் பயன்பாடும் நன்மைகளும்

சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, வரும் நிதியாண்டின் தொடக்கத்தில் இந்த நீண்ட காலம் உழைக்கக்கூடிய பாலிமர் ரூபாய் நோட்டுகளை வெளியிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

காகித நோட்டுகளை விட பிளாஸ்டிக் நோட்டுகள் நீண்ட காலம் சேதமடையாமல் உழைக்கக்கூடியவை என்பதால், அதிக சுழற்சியில் உள்ள குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளுக்கு இவை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

தற்போது காகித ரூபாய் நோட்டுகளுடன் இணைந்தே இந்தப் பாலிமர் நோட்டுகளும் புழக்கத்தில் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கள ஆய்வுகள் வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில், தொடர்ந்து பாலிமர் நோட்டுகள் வழக்கமான முறையில் அச்சிடப்படும்.

ADVERTISEMENT