பறக்கும் கார்கள் தயாரிப்பில் எக்ஸ்பெங்: 2027ல் விற்பனையை தொடங்குவதாக அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
சீனாவின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பெங், வெறும் வாகனத் தயாரிப்புடன் மட்டும் நின்றுவிடாமல், எதிர்காலத் தொழில்நுட்பங்களான பறக்கும் கார்கள், ரோபோடாக்சிகள் மற்றும் மனித உருவ ரோபோக்கள் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது. அந்நிறுவனத்தின் தலைவர் பிரையன் கு, இது குறித்த எதிர்காலத் திட்டங்களை அண்மையில் வெளிப்படுத்தியுள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
பறக்கும் கார்கள்
பறக்கும் கார்கள் மற்றும் ரோபோட்டிக்ஸ் திட்டம்
எக்ஸ்பெங் நிறுவனம் தனது பறக்கும் கார்களுக்கான பெரிய அளவிலான உற்பத்தியை அடுத்த ஆண்டு தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே 7,000க்கும் மேல் குவிந்துள்ளன, இதில் பெரும்பான்மையானவை சீனாவில் இருந்து வந்தவை. சீன விமானப் போக்குவரத்து அதிகாரிகளிடம் இதற்கான அனுமதியைப் பெறும் பணிகளில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு குவாங்சூ நகரில் ரோபோடாக்சி சோதனைகளைத் தொடங்கவுள்ள அந்நிறுவனம், 2027 ஆம் ஆண்டை உலகளாவிய சோதனைகளுக்கான ஒரு மிக முக்கியமான ஆண்டாகக் கருதுகிறது.
ரோபோக்கள்
மனித உருவ ரோபோக்களின் எதிர்காலம்
எக்ஸ்பெங் நிறுவனத்தின் மனித உருவ ரோபோக்கள், ஆரம்பகட்டத்தில் விற்பனை மையங்கள் மற்றும் வரவேற்பு அறைகளில் வாடிக்கையாளர்களுடன் உரையாடும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளன. அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில், எக்ஸ்பெங்கின் ரோபோட்டிக்ஸ் வணிகம், தற்போதைய வாகனத் தயாரிப்புத் துறையை விடப் பெரியதாக வளரும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மனிதர்களின் அன்றாட வாழ்வில் ரோபோக்களுக்கான பயன்பாடு வரும் காலங்களில் பலமடங்கு அதிகரிக்கும் என்பதே இதற்கு முக்கியக் காரணம்.
உலகளாவிய விரிவாக்கம்
ஃபோக்ஸ்வேகன் கூட்டணியும் உலகளாவிய விரிவாக்கமும்
ஜெர்மனியின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் உடன் எக்ஸ்பெங் கொண்டுள்ள கூட்டணி, பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்த முதல் மின்சார வாகனத்தின் உற்பத்தி கடந்த மாதம் தொடங்கியுள்ளது. இந்த ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும், மற்ற பிராந்தியங்களில் உள்ள நிறுவனங்களுடன் புதிய கூட்டணிகளை ஏற்படுத்தவும் எக்ஸ்பெங் தயாராக உள்ளது. தற்போது சுமார் 60 நாடுகளில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் தனது மொத்த வருவாயில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகையைச் சீனாவிற்கு வெளியேயான சர்வதேசச் சந்தைகள் மூலம் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.