Loading...
எத்தனால், பெட்ரோல் தேவையில்லை! உத்தரகாண்ட் கிராமத்து இளைஞரின் பறக்கும் மின்சார கார்; வெற்றிகரமாக சோதனை
உத்தரகாண்ட் கிராமத்து இளைஞரின் பறக்கும் மின்சார கார்

எத்தனால், பெட்ரோல் தேவையில்லை! உத்தரகாண்ட் கிராமத்து இளைஞரின் பறக்கும் மின்சார கார்; வெற்றிகரமாக சோதனை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 07, 2026
06:01 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தனிநபர் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் புதிய பறக்கும் காரை உருவாக்கி வெற்றிகரமாக சோதித்துள்ளார். அல்மோரா மாவட்டத்தில் உள்ள காஃப்லிகான் கிராமத்தை சேர்ந்த ரவி தம்டா என்ற இளம் கண்டுபிடிப்பாளர், தனது ஹபிடா ஸ்கை பிரைவேட் லிமிடெட் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் மூலமாக இந்த ஹபிடா ஸ்கைநெக்ஸ் வாகனத்தை வடிவமைத்துள்ளார். பல வருட தொடர் ஆராய்ச்சி மற்றும் உழைப்பிற்குப் பிறகு இந்த காரின் மாதிரி வடிவம் வான்வெளியில் வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டு அதன் முதற்கட்ட பரிசோதனை சிறப்பாக நிறைவடைந்துள்ளது.

எரிபொருள் தேவையில்லை

எத்தனால் மற்றும் வழக்கமான எரிபொருள்கள் தேவையில்லை

பொதுவாக வான்வெளி வாகனங்கள் பெட்ரோலியப் பொருட்கள், விமான எரிபொருள் அல்லது தற்போது ஆய்வில் உள்ள எத்தனால் போன்ற எரிபொருட்களை நம்பியே இயங்குகின்றன.

ஆனால், ரவி தம்டா உருவாக்கியுள்ள ஹபிடா ஸ்கைநெக்ஸ் வாகனம் எந்தவிதமான திரவ எரிபொருளும் இன்றி முழுமையாக பேட்டரி மின்சாரத்தின் மூலம் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் காற்றில் புகை உமிழ்வு ஏதும் இல்லாத சுற்றச்சூழலுக்கு உகந்த பசுமை வாகனமாக இது கருதப்படுகிறது.

இந்தியாவில் பாதுகாப்பான மற்றும் குறைந்த செலவிலான வான்வழிப் போக்குவரத்தை அனைவருக்கும் கிடைக்க செய்வதே தனது முதன்மை நோக்கம் என்று ரவி தம்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மலைப் பகுதிகள்

இமயமலைப் பிராந்தியங்களுக்கான சிறந்த போக்குவரத்து தீர்வு

உத்தரகாண்ட் போன்ற இமயமலை பாறை நிலப்பரப்புகளில் சாலைப் போக்குவரத்தை அமைப்பதும் சீரமைப்பதும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் சூழலில், இத்தகைய வான்வெளி மின்சார வாகனங்கள் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலைப்பாங்கான கிராமங்களை இணைக்கவும், ஆபத்தான சாலைகளுக்கு மாற்றாக அதிவேகப் பயணத்தை வழங்கவும் இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சாலை வசதிகள் குறைவாக இருக்கும் தொலைதூர மலைக் கிராமங்களுக்குச் செல்லவும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வான்வழிப் பயண அனுபவத்தை வழங்கவும் இந்த மின்சாரப் பறக்கும் கார் உதவும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ADVERTISEMENT

பேரிடர் மேலாண்மை

அவசர கால மீட்புப் பணிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை

இயற்கைப் பேரிடர்களான நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் இமயமலை கிராமங்கள் வெளிப்புற உலகத் தொடர்பை இழந்து தவிக்கும் போது, இந்த சிறிய ரக மின்சாரப் பறக்கும் வாகனங்கள் உடனடி மீட்புப் பணிகளுக்குப் பெரிதும் பயன்படும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக மருந்துப் பொருட்கள், உணவு மற்றும் முதலுதவிகளை கொண்டு செல்ல இது பெரிதும் உதவும்.

தற்போது இந்த வாகனம் மாதிரிப் பரிசோதனை நிலையிலேயே உள்ளதால், வணிகரீதியிலான பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக அரசின் வான்வழிப் போக்குவரத்து அமைப்புகளின் முறையான அனுமதிகளையும் பல்வேறு கட்டக் கடினமான பாதுகாப்பு சோதனைகளையும் கடக்க வேண்டியுள்ளது.

ADVERTISEMENT