Page Loader
ஆசியாவின் முதல் ஹைட்ரஜன் அதிவேக ரயில், சீனாவில் அறிமுகம்: அதன் சிறப்பம்சங்கள் இதோ
சீனாவில் ஹைட்ரஜன் ரயில்

ஆசியாவின் முதல் ஹைட்ரஜன் அதிவேக ரயில், சீனாவில் அறிமுகம்: அதன் சிறப்பம்சங்கள் இதோ

எழுதியவர் Venkatalakshmi V
Jan 05, 2023
12:43 pm

செய்தி முன்னோட்டம்

ஆசியாவிலேயே முதல் முறையாக, ஹைட்ரஜனில் இயங்கும், அதிவேக பயணிகள் ரயில், சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, CRRC சாங்சுன் இரயில் நிறுவனம் மற்றும் செங்டு இரயில் போக்குவரத்து ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளது. இந்த ரயிளில், ஒரே நாளில் 500 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தி இயங்குவதால், கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம், ஆண்டுக்கு 10,000 கிலோவுக்கு மேல் குறைகிறது என்றும் கூறப்படுகிறது. எனினும், உலகின் முதல் ஹைட்ரஜனால் இயங்கும் ரயில், சென்ற ஆண்டு, ஜெர்மனியில் தனது சேவையைத் தொடங்கியது. சீனாவில், இந்த ஹைட்ரஜன் ரயில்கள், மின்மயமாக்கப்படாத பாதைகளிலும் பயன்படுத்தப்படலாம். சீனாவின் புதிய ஹைட்ரஜன் ரயில், ஃபக்சிங் புல்லட் ரயிலின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

மேலும் சில தகவல்கள்

அதிவேக ஹைட்ரஜன் ரயில்

இந்த ஹைட்ரஜன் ரயிலில் 1,502 பயணிகள் அமரும் திறன் கொண்டது, மேலும் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும். இதன் உள்ளமைக்கப்பட்ட "ஹைட்ரஜன் பவர்" சிஸ்டம் 600கிமீ பேட்டரி ஆயுள் கொண்டது. சீனாவின் ஹைட்ரஜன் ரயில், பல ஸ்மார்ட் டிரைவிங் அம்சங்களுடன் வருகிறது. நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்புகள், சென்சார்கள், மற்றும் மல்டி-நெட்வொர்க் ஒருங்கிணைப்புக்கான 5G வசதியும் உள்ளது. இதே போல, இந்தியாவிலும் விரைவில், ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். 2023 டிசம்பரில், 'வந்தே மெட்ரோ' என்று அழைக்கப்படும் இந்த ரயில்கள், 1950-60களில் அறிமுகப்படுத்தப்பட்ட, டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில், நீலகிரி மலை ரயில் போன்றவற்றிற்கு மாற்றாக இருக்கும், என்று அவர் அறிவித்துள்ளார்.