Loading...
அமெரிக்க மாணவர் விசா விதிகளில் மாற்றம் செய்ய நடவடிக்கை! இந்திய மாணவர்களுக்குப் புதிய சிக்கல்
அமெரிக்க மாணவர் விசா விதிகளில் மாற்றம் செய்ய நடவடிக்கை

அமெரிக்க மாணவர் விசா விதிகளில் மாற்றம் செய்ய நடவடிக்கை! இந்திய மாணவர்களுக்குப் புதிய சிக்கல்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 16, 2026
09:03 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் தங்கிப் படிக்கும் இந்திய மாணவர்கள் உட்பட 12 லட்சத்திற்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை விசா விதிமுறைகளில் மிகக் கடுமையான புதிய மாற்றங்களை இறுதி செய்துள்ளது. சர்வதேச மாணவர்கள் தங்களது படிப்புக் காலம் முழுவதும் அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதி அளித்து வந்த பல தசாப்த கால டியூரேஷன் ஆஃப் ஸ்டேட்டஸ் (Duration of Status - D/S) நடைமுறை தற்பொழுது அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, மாணவர்களின் தங்குமிடம் மற்றும் விசா காலத்திற்குப் புதிய நிலையான வரம்புகள் (Fixed Visa Terms) விதிக்கப்பட்டுள்ளன.

காலக் கெடு

எஃப்-1 விசாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 4 ஆண்டுகாலக் கெடு

புதிய விதிமுறைகளின்படி, அமெரிக்காவிற்கு உயர் கல்விக்காக வரும் சர்வதேச எஃப்-1 விசாதாரர்கள் இனி பொதுவாக அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை மட்டுமே அமெரிக்காவில் தங்கிப் படிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

தங்களது பட்டப்படிப்பு அல்லது ஆராய்ச்சிப் பணிகளை முடிக்க 4 ஆண்டுகளுக்கும் மேலாகக் கூடுதல் காலம் தேவைப்படும் மாணவர்கள், தங்களது விசா காலாவதியாவதற்கு முன்பாகவே அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளிடம் முறையான நீட்டிப்பு விண்ணப்பத்தை சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.

இந்த புதிய கட்டமைப்பு எஃப்-1 மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஜே-1 எக்ஸ்சேஞ்ச் விசிட்டர்கள் மற்றும் ஐ விசா கொண்ட சர்வதேச ஊடகவியலாளர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மாணவர்கள்

3.3 லட்சம் இந்திய மாணவர்களுக்கு ஏற்படப் போகும் நேரடி பாதிப்பு

அமெரிக்காவின் இந்த அதிரடி விசா மாற்றத்தால் அங்குப் படிக்கும் 3.3 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.

தற்போதைய நிலையில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் சர்வதேச மாணவர்களில் 30 சதவீதத்துடன் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர்.

இந்திய மாணவர்களில் பெரும்பாலானோர் முனைவர் பட்டம், மருத்துவப் பயிற்சி, பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பட்ட அறிவியல் படிப்புகளையே தேர்வு செய்கின்றனர்.

இந்த உயர் படிப்புகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையப் பொதுவாக 4 ஆண்டுகளுக்கும் மேலாகும் என்பதால், இனி ஒவ்வொரு இந்திய மாணவரும் தங்களது படிப்பின் நடுவே விசா நீட்டிப்பிற்காகத் தனியாக விண்ணப்பித்துக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சட்டவிரோத வருகை

விசா காலம் முடிந்தால் 'சட்டவிரோத வருகை' என அபராதம் விடுக்கப்படும்

தற்போதைய நெகிழ்வான விசா முறை போலன்றி, புதிய விதியின் கீழ் ஒரு மாணவர் தனது 4 ஆண்டுகால அனுமதி முடிவடைவதற்குள் விசா நீட்டிப்பு அனுமதியைப் பெறத் தவறினால், அவர் உடனடியாக அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவராக கருதப்படுவார்.

அமெரிக்க நிர்வாகத்தின் ஆவணப் பரிசீலனை தாமதங்கள் அல்லது விண்ணப்ப நடைமுறை நெரிசல்கள் காரணமாக மாணவர்களின் விசா நீட்டிப்பு தள்ளிப்போனால் கூட, அவர்கள் தங்களது சட்டபூர்வ தகுதியை இழந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அல்லது மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கப்படும் ஆபத்தான சூழல் உருவாகும்.

மேலும், படிப்பு முடிந்த பிறகு வழங்கப்படும் 60 நாட்கள் சலுகைக் காலம் இனி 30 நாட்களாகக் குறைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

தேசிய பாதுகாப்பு

தேசியப் பாதுகாப்பு மற்றும் விசா முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை

அமெரிக்க விசா முறையைத் துல்லியமாகக் கண்காணிக்கவும், விசா காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாகத் தங்குபவர்களைக் கண்டறியவும், தேசிய பாதுகாப்பை பலப்படுத்தவுமே இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் திடீர் விதிகளால் தங்களது கல்விப் பயணம் பாதிக்கப்படும் எனப் பல பல்கலைக்கழகங்களும் கல்வி அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளன.

அமலாவது எப்போது?

புதிய விதியின் அமலாக்கத் தேதி எப்போது?

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையால் இந்த விதிமுறைகள் தற்பொழுது இறுதி வடிவம் கொடுக்கப்பட்டிருந்தாலும், இது உடனடியாக நடைமுறைக்கு வராது.

இந்த புதிய விதியானது அமெரிக்க நாடாளுமன்றத்தின் இறுதிப் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்படும்.

அதுவரை, சர்வதேச மாணவர்கள் தங்களது படிப்புக் காலம் முழுவதும் தங்கிப் படிப்பதற்கான பழைய 'டியூரேஷன் ஆஃப் ஸ்டேட்டஸ்' முறையே தற்காலிகமாகத் தொடரும் என்பதால் மாணவர்கள் தற்போதைக்கு பதற்றமடையத் தேவையில்லை.

ADVERTISEMENT