சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா தாக்குதல்
அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்திய, ஈரானின் புரட்சிகர காவலர் படையின் தளங்கள் மீது, தெற்கு சிரியாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க படைகளின் இந்த தாக்குதல், கடந்த வாரம் அமெரிக்க படைகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக பார்க்கப்படுகிறது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின், ஈரான் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளை பாதுகாக்க நடைபெற்ற 'துள்ளிய தற்காப்பு தாக்குதல்' என குறிப்பிட்டுள்ளார். "அமெரிக்கப் படைகள் மீதான ஈரான் ஆதரவு அமைப்புகளின் தாக்குதல் ஏற்றுக் கொள்ள முடியாதது, உடனடியாக நிறுத்தப்பட வேண்டியது" என்றார். மேலும் இஸ்ரேல் பாலஸ்தீனிய போருக்கும், அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமெரிக்கா தெளிவுபடுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் நடந்த தாக்குதலுக்கு பதிலடி தந்த அமெரிக்கா
கடந்த வாரம், அக்டோபர் 17ஆம் தேதி அன்று, சிரியா மற்றும் ஈரானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் மீது, ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இதில் சில அமெரிக்கா வீரர்கள் காயமடைந்தும் இருந்தனர். அமெரிக்கா, "தேர்ந்தெடுக்கப்படும் இடத்தில், தேர்ந்தெடுக்கப்படும் நேரத்தில்" தக்க பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி வழங்கப்படும் என ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.