மீண்டும் வெடிக்குமா போர்?: நெதன்யாகு - டிரம்ப் ரகசிய ஆலோசனையால் மத்திய கிழக்கில் உச்சகட்டப் பதற்றம்!
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கில் தற்காலிகமாக நிலவி வந்த போர்நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்காத சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே நேற்று (மே 17) நடைபெற்ற தொலைபேசி பேச்சுவார்த்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ஆபரேஷன் ஸ்லெட்ஜ்ஹேமர்' (Operation Sledgehammer) என்ற பெயரில் ஈரான் மீது மீண்டும் கூட்டுத் தாக்குதல் நடத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டமிட்டு வருவதாக வெளியாகும் தகவல்கள், புதிய உலகப் போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஆபரேஷன் ஸ்லெட்ஜ்ஹேமர்
புதிய தாக்குதல் திட்டம்?
கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலால் உலகளவில் கடுமையான எரிசக்தி விநியோகப் பற்றாக்குறை (Global Energy Crisis) ஏற்பட்டது. அதன் பின்னர் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) முடிவுக்கு வந்ததாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், தற்போது ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது மற்றும் அமைதி பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை காரணமாக, ஈரான் மீது இந்த வாரமே புதிய பெயரில் தாக்குதலைத் தொடங்க அமெரிக்க அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாக எபிரேய (Hebrew) ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவசர கூட்டம்
இஸ்ரேல் அமைச்சரவையின் அவசரக் கூட்டம்
அதிபர் ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரதமர் நெதன்யாகு ஜெருசலேமில் உள்ள தனது அலுவலகத்தில் பாதுகாப்பு அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார். இக்கூட்டத்திற்கு முன்பாகப் பேசிய நெதன்யாகு, "ஈரான் விவகாரத்தில் எங்கள் கண்கள் திறந்தே இருக்கின்றன; அனைத்து விதமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்" என்று எச்சரித்துள்ளார். இந்த உயர்மட்டக் கூட்டத்தில் இஸ்ரேலின் முக்கிய அமைச்சர்களான கிதியோன் சார், இஸ்ரேல் காட்ஸ் மற்றும் இடாமர் பென் கிவீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புயலுக்கு முந்தைய அமைதி
ட்ரம்பின் பகிரங்க எச்சரிக்கை!
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில், அமெரிக்க கடற்படைக் கப்பல்களின் பின்னணியில் "இது புயலுக்கு முந்தைய அமைதி" என்ற வாசகத்துடன் கூடிய செயற்கை நுண்ணறிவு (AI) புகைப்படத்தைப் பகிர்ந்து ஈரானை எச்சரித்துள்ளார். மேலும், "ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உடனே சம்மதிக்க வேண்டும், இல்லையெனில் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை (மே 19) வெள்ளை மாளிகையின் சிச்சுவேஷன் ரூமில் (Situation Room) அவசரப் பாதுகாப்புக் கூட்டத்தை நடத்த உள்ளார்.
நிபந்தனைகள்
அமைதி ஒப்பந்தம்
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளே பேச்சுவார்த்தை முறியவதற்குக் காரணமாக அமைந்துள்ளன. அமெரிக்காவின் முக்கிய நிபந்தனைகள்: ஈரான் தன்னிடம் உள்ள 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Enriched Uranium) ஒப்படைக்க வேண்டும். ஒரே ஒரு அணுசக்தி நிலையத்தை (Nuclear Facility) மட்டுமே இயக்க வேண்டும். போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு எவ்வித இழப்பீடும் கோரக் கூடாது. ஈரானின் எதிர் நிபந்தனைகள்: பொருளாதாரத் தடைகளை (Sanctions) முழுமையாக நீக்க வேண்டும். முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்களை விடுவிக்க வேண்டும். ஹார்முஸ் நீரிணை மீதான ஈரானின் இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும்.