ஈரானை தாக்கத் தயாராகும் அமெரிக்கா? டிரம்பின் மேசையில் 3 போர்க்காலத் திட்டங்கள்
செய்தி முன்னோட்டம்
ஈரான் உடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மேசைக்கு மூன்று மிகமுக்கியமான ராணுவ தாக்குதல் திட்டங்கள் (Operational Options) கொண்டு செல்லப்பட்டுள்ளன. இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் ரகசியக் கூட்டத்தில், அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) அட்மிரல் பிராட் கூப்பர், இந்தத் திட்டங்கள் குறித்து டிரம்பிற்கு விளக்கம் அளிக்க உள்ளார். பொருளாதார நெருக்கடி மற்றும் கடற்படை முற்றுகையைத் தாண்டி, நேரடி ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயாராகி வருவதையே இது காட்டுகிறது.
நடவடிக்கை
டிரம்பின் முன்னுள்ள 3 ராணுவத் திட்டங்கள்
1. "குறுகிய மற்றும் சக்திவாய்ந்த" வான்வழித் தாக்குதல்: ஈரானின் குறிப்பிட்ட உட்கட்டமைப்புகளைத் தகர்ப்பதன் மூலம், அந்நாட்டின் செயல்பாட்டுத் திறனை முடக்கி, பேச்சுவார்த்தைக்குப் பணிய வைப்பது. 2. ஹார்முஸ் நீரிணையை மீட்டெடுத்தல்: வணிகக் கப்பல் போக்குவரத்தைச் சீரமைக்க, ஹார்முஸ் நீரிணையின் சில பகுதிகளை அமெரிக்க கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது. இதில் தரைப்படை வீரர்களின் பங்களிப்பும் இருக்கக்கூடும் என்பதால் இது அதிக ஆபத்து நிறைந்ததாகக் கருதப்படுகிறது. 3. அணுசக்தி இலக்குகள் மீதான சிறப்பு நடவடிக்கை: ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பைச் சிதைக்க அல்லது கைப்பற்ற ஒரு சிறப்பு அதிரடிப்படை (Special Operations) தாக்குதலை நடத்துவது. இது அரசியல் ரீதியாகப் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியது.
குழப்பம்
முற்றுகையா? போரா? -குழப்பத்தில் வாஷிங்டன்
தற்போதைக்குக் கடற்படை முற்றுகை மூலம் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்குவதே டிரம்ப்பின் முதன்மைத் திட்டமாக உள்ளது. இது போரை விடக் குறைந்த ஆபத்துடையது என அவர் கருதினாலும், இதற்கு ஈரானின் பதிலடி மிகக் கடுமையாக இருக்கும் என ராணுவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கிடையில், துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், பென்டகன் வழங்கும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிகிறது. போர்க்கள நிலவரத்தை அதிபருக்குத் தெளிவான வரைபடங்கள் மூலம் விளக்காமல், மிகச் சுருக்கமான (2-minute snapshots) தகவல்களாக வழங்குவது சரியான முடிவெடுக்கத் தடையாக இருக்கும் என அவர் கருதுகிறார்.
செலவு
பொருளாதார சுமை மற்றும் ஆயுதப் பற்றாக்குறை
செலவு: 8 வாரங்களாக நீடிக்கும் இந்த மோதலுக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் (₹2.08 லட்சம் கோடி) செலவாகியுள்ளது. ஆயுத இருப்பு: போர் நீடித்தால் அமெரிக்காவின் ஏவுகணை கையிருப்பு குறையக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. விலைவாசி: மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது அமெரிக்காவிற்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.