LOADING...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்பிற்கு அதிர்ச்சி: ஈரான் போரை நிறுத்தக்கோரி சொந்தக் கட்சியினரே கொண்டுவந்த தீர்மானம்
அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை புதன்கிழமை ஒரு முக்கியத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது

அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்பிற்கு அதிர்ச்சி: ஈரான் போரை நிறுத்தக்கோரி சொந்தக் கட்சியினரே கொண்டுவந்த தீர்மானம்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 04, 2026
08:18 am

செய்தி முன்னோட்டம்

மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் ஈரான் உடனான போரை கையாள்வதில் அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்து வரும் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை புதன்கிழமை ஒரு முக்கியத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அதிபர் டிரம்ப் தொடர்ந்து ஈரான் மீதான போரை முன்னெடுப்பதைத் தடுக்கும் நோக்கில் இந்த 'போர் அதிகாரத் தீர்மானம்' கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சியே மெல்லிய பெரும்பான்மையை கொண்டுள்ளபோதிலும், டிரம்பிற்கு எதிராக இந்த தீர்மானம் 215-க்கு 208 என்ற வாக்குகள் கணக்கில் நிறைவேறியுள்ளது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நான்கு எம்பிக்கள் தங்களது சொந்தக் கட்சித் தலைவரான டிரம்பிற்கு எதிராக, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

வெற்றி

குறியீட்டு அளவிலான வெற்றி

இந்தத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், இது ஒரு தார்மீக மற்றும் குறியீட்டு ரீதியிலான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்தத் தீர்மானம் சட்டப்பூர்வமாக அமலுக்கு வர அமெரிக்கச் செனட் சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். மேலும், அவ்வாறு நிறைவேற்றப்பட்டாலும் அதிபர் டிரம்ப் தனது சிறப்பு வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இதை நிராகரிக்க அதிக வாய்ப்புள்ளது. அதனை முறியடிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்பதால், உடனடியாகப் போர் நிறுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. எனினும், அதிபரின் தன்னிச்சையான போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த இரு கட்சிகளும் இணைந்து மேற்கொண்ட இந்த முயற்சி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

முட்டுக்கட்டை

டிரம்பிற்கு எதிராகத் தொடரும் நாடாளுமன்ற முட்டுக்கட்டைகள்

ஈரான் விவகாரம் மட்டுமன்றி, சமீபகாலமாக டொனால்ட் டிரம்ப் நாடாளுமன்றத்தில் பலதரப்பட்ட எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறார் உக்ரைனுக்குப் பாதுகாப்பு உதவிகளை வழங்குவதற்கும், ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கும் ஆதரவாகப் பிரதிநிதிகள் சபையில் புதன்கிழமை மற்றொரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது அடுத்தகட்டத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்பின் அரசியல் கூட்டாளிகளுக்கு நிதி வழங்குவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த ஒரு சிறப்பு நிதியை டிரம்ப் நிர்வாகம் கைவிடுவதாகப் தற்காலிக அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புத் துறையில் எவ்வித அனுபவமும் இல்லாத, டிரம்பிற்கு நெருக்கமான பில் புல்டே என்பவரைத் தேசிய உளவுத்துறையின் தற்காலிக இயக்குநராக டிரம்ப் தேர்வு செய்ததற்கும் குடியரசுக் கட்சி எம்பிக்கள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement