LOADING...
ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்கா அதிரடி தாக்குதல்: ஈரானின் ராணுவ தளம் மற்றும் ட்ரோன்கள் அழிப்பு!
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்

ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்கா அதிரடி தாக்குதல்: ஈரானின் ராணுவ தளம் மற்றும் ட்ரோன்கள் அழிப்பு!

எழுதியவர் Sekar Chinnappan
May 28, 2026
09:52 am

செய்தி முன்னோட்டம்

சர்வதேச அளவில் மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழிப் பகுதிக்கு அருகே, ஈரானின் அச்சுறுத்தலாக விளங்கிய ராணுவ தளம் மற்றும் நவீன ட்ரோன்கள் மீது அமெரிக்க ராணுவம் புதிய தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து ஈரான் ஏவிய நான்கு ஒற்றை வழித் தாக்குதல் ட்ரோன்களை (One-way attack drones) அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் படைகள் வான்வழியிலேயே இடைமறித்துத் துல்லியமாக அழித்தன. இந்த ராணுவ நடவடிக்கையின் போது, ஐந்தாவது ட்ரோனை ஏவுவதற்குத் தயாராக இருந்த ஈரானின் முக்கியத் துறைமுக நகரான பண்டார் அப்பாஸில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தையும் அமெரிக்கப் படைகள் ஏவுகணைகள் மூலம் தகர்த்தன.

உலகப் பொருளாதாரப் பதற்றம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடிக்கும் பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் வெடித்த மோதல்

இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தைத் தணிப்பதற்கான தூதரகப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், நடப்பு வாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் இரண்டாவது தற்காப்புத் தாக்குதல் இதுவாகும். உலகப் பொருளாதாரத்தில் பெரும் தேக்க நிலை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வை ஏற்படுத்தியுள்ள இந்த மூன்று மாத காலப் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆயினும், வரவிருக்கும் நவம்பர் மாத இடைக்காலத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஈரான் நாட்டுடன் அவசர அவசரமாக எந்தவொரு உடன்படிக்கையையும் செய்துகொள்ளப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கை

ஈரானின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் அணு ஆயுதக் கொள்கை குறித்து டொனால்ட் டிரம்பின் அதிரடி அறிக்கை

அமெரிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப, ஈரானின் ஒட்டுமொத்தப் பொருளாதார அமைப்பும் தற்பொழுது முற்றிலும் உடைந்து, அந்நாடு கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஈரானில் தற்பொழுது பணவீக்கம் 250 சதவீதமாக உயர்ந்துள்ளதோடு, அதன் உள்நாட்டு நாணயமும் தனது மதிப்பை முழுமையாக இழந்து நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். உலக நாடுகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே தாம் இந்த நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறிய டிரம்ப், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றும், அவ்வாறு அவர்கள் உருவாக்கினால் அதை உடனடியாகப் பயன்படுத்தி விடுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

Advertisement

கடல்வழிப் பாதை பாதுகாப்பு

ஹார்முஸ் ஜலசந்தியை எவரும் கட்டுப்படுத்த முடியாது என அமெரிக்கா விடுத்த திட்டவட்டமான எச்சரிக்கை

சர்வதேசக் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியத் தளமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை எந்தவொரு தனி நாடும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அமெரிக்கா அனுமதிக்காது என்று டிரம்ப் உறுதியளித்துள்ளார். இந்த உலகளாவிய கப்பல் போக்குவரத்துப் பாதை அனைத்து நாடுகளின் வணிகப் பயன்பாட்டிற்கும் எப்போதும் திறந்தே இருக்கும் என்றும், அமெரிக்க ராணுவம் இதனைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ரஷ்யா அல்லது சீனாவிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும், ஈரானுக்கு எவ்விதப் பொருளாதாரத் தடைகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட மாட்டாது என்றும் அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

Advertisement