சீக்கிய தீவிரவாதியை கொன்றதன் பின்னணியில் இந்தியா? மத்திய அமைச்சர்களுக்கு பகிரங்க மிரட்டல்
அமெரிக்காவில் வசிக்கும் தடைசெய்யப்பட்ட சீக் ஃபார் ஜஸ்டிஸ் பயங்கரவாதி, ஜிஎஸ் பண்ணு வெள்ளிக்கிழமை (ஜூலை 21) வெளியிடப்பட்ட காணொளியில், மத்திய அமைச்சர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை, வான்கூவரில் சுட்டுக் கொன்றதன் பின்னணியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா இருப்பதாக குற்றம் சாட்டியதோடு, அவர்களின் வெளிநாட்டு பயணம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு, ₹1கோடி பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 15 அன்று, கனடாவில் உள்ள இந்திய தூதரக வளாகங்களை முற்றுகையிட சீக் ஃபார் ஜஸ்டிஸ் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் வான்கூவரில் சீக்கிய வாக்கெடுப்பை செப்டம்பர் 10 ஆம் தேதி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
சீக்கிய தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் அமெரிக்கா மற்றும் கனடா
அமித் ஷா, ஜெய்சங்கர் மற்றும் சஞ்சய் குமார் வர்மா ஆகியோர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்குவது குறித்து கனடாவில் உள்ள இந்திய தூதர்கள் ஏற்கனவே புலனாய்வு அமைப்புகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். எனினும், கனடாவில் உள்ள அரசு, சீக்கிய தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், வாக்கு வங்கி அரசியலுக்காக ஊக்குவித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையே, அமெரிக்கா, இந்தியாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வரும் நிலையில், ஜிஎஸ் பண்ணு மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கேள்வியை எழுப்பியுள்ளது. பல ஆண்டுகளாக, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகியவை சீக்கிய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து, தங்கள் நாடுகளுக்குள் நிதி திரட்ட அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.