LOADING...
ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த அல்டிமேட்டம்! இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு குவியும் அமெரிக்க ஆயுதங்கள்: பின்னணி என்ன?
இஸ்ரேல், மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா 8.6 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை

ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த அல்டிமேட்டம்! இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு குவியும் அமெரிக்க ஆயுதங்கள்: பின்னணி என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
May 02, 2026
10:51 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் உடனான போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தனது முக்கிய நட்பு நாடுகளான இஸ்ரேல், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றிற்கு 8.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை வெள்ளிக்கிழமை (மே 1) ஒப்புதல் அளித்துள்ளது. ஈரானுடனான மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்ற நிச்சயமற்ற சூழல் நிலவி வரும் வேளையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அந்த பிராந்தியத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆயுத விற்பனை

நாடுகள் வாரியாக ஆயுத விற்பனை விவரம்

இந்த 8.6 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலுக்கு 992.4 மில்லியன் டாலர் மதிப்பிலான 'அட்வான்ஸ்டு பிரிசிஷன் கில் வெப்பன் சிஸ்டம்ஸ்' (APKWS) வழங்கப்பட உள்ளது. குவைத் நாடு 2.5 பில்லியன் டாலர் மதிப்பில் ஒருங்கிணைந்த போர் கட்டளை அமைப்பைப் (Integrated Battle Command System) பெறுகிறது. கத்தார் நாட்டிற்கு 4.01 பில்லியன் டாலர் மதிப்பிலான பேட்ரியாட் வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை பாதுகாப்பு சேவைகள் வழங்கப்பட உள்ளன. மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு 147.6 மில்லியன் டாலர் மதிப்பிலான APKWS ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

நிராகரிப்பு

ஈரானின் திட்டத்தை நிராகரித்த டொனால்ட் டிரம்ப்

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் ஒன்பதாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், ஈரான் சமர்ப்பித்த புதிய அமைதித் திட்டத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக நிராகரித்துள்ளார். "அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள், ஆனால் அதில் எனக்குத் திருப்தி இல்லை." என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் குறிப்பிட்டார். ஈரானுக்கு தற்போது இரண்டு வழிகள் மட்டுமே உள்ளதாகவும், ஒன்று அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்பது அல்லது புதிய தாக்குதல்களை எதிர்கொள்வது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

ராணுவ பலம்

ஈரானின் ராணுவ பலம் குறித்து டிரம்பின் கருத்து

ஈரானின் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் உரிமை கோரியுள்ளார். ஈரானிடம் தற்போது கடற்படை, விமானப்படை, விமான எதிர்ப்பு உபகரணங்கள் அல்லது ரேடார் வசதிகள் என எதுவும் மிஞ்சவில்லை என்றும், அந்த நாட்டுக்குத் தலைமை தாங்கத் தலைவர்களும் இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். "ஈரானை அணு ஆயுதம் வைத்திருக்க அனுமதித்தால், ஒட்டுமொத்த உலகமும் பெரும் ஆபத்தில் சிக்கிவிடும். அது ஒருபோதும் நடக்காது," என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Advertisement

போரின் முடிவு

எரிபொருள் தட்டுப்பாடும் போரின் முடிவும்

தற்போது நிலவி வரும் கச்சா எண்ணெய் நெருக்கடியுடன் இந்தப் போரை இணைத்துப் பேசிய டிரம்ப், இந்தப் போர் முடிவுக்கு வந்தவுடன் பெட்ரோல் விலையும் குறையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இதே போன்றதொரு பிரச்சினை எழுவதை அமெரிக்கா விரும்புவதில்லை என்றும், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதே தனது நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் இந்த ஆயுத விற்பனை அறிவிப்பு, ஈரான் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Advertisement