டிரம்ப் ஆட்சியில் அடுத்தடுத்த அதிர்ச்சி! ஈரான் போர் விவகாரத்தில் மோதல்? உளவுத்துறை முதன்மை அதிகாரி துளசி காபார்ட் ராஜினாமா
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான மத்திய நிர்வாகத்தில் ஒரு புதிய அதிரடி அரசியல் திருப்பமாக, அந்நாட்டின் தேசிய உளவுத்துறை இயக்குனர் பதவியிலிருந்து துளசி காபார்ட் அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். தனது கணவரின் உடல்நலக் குறைவைக் காரணமாகக் காட்டி அவர் இந்த அவசர முடிவை எடுத்துள்ளதாகத் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது இந்த விலகல் கடிதத்தை அதிபருக்கு அனுப்பியுள்ள அவர், குடும்பத்தின் இக்கட்டான தற்காலிகச் சூழல் காரணமாகவே பொது வாழ்வில் இருந்து தற்காலிகமாக விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரியவகை புற்றுநோய்
கணவரின் அரிய வகை புற்றுநோய் பாதிப்பால் விலகும் துளசி காபார்ட்
துளசி காபார்ட் வெளியிட்டுள்ள உருக்கமான கடிதத்தில், தனது கணவர் ஆபிரகாமுக்கு மிகவும் அரிய வகை எலும்புப் புற்றுநோய் பாதிப்பு இருப்பது சமீபத்திய மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வரவிருக்கும் வாரங்களில் அவர் பல கடினமான மருத்துவச் சிகிச்சைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால், இந்த இக்கட்டான போரில் ஒரு மனைவியாக அவருக்குத் துணையாக இருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இவ்வளவு பெரிய பொறுப்பில் நீடித்துக் கொண்டே கணவரைத் தனியாகப் போராட விடுவது தனது மனசாட்சிக்கு உகந்தது அல்ல என்றும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
I am deeply grateful for the trust President Trump placed in me and for the opportunity to lead @ODNIgov for the last year and a half.
— Tulsi Gabbard 🌺 (@TulsiGabbard) May 22, 2026
Unfortunately, I must submit my resignation, effective June 30, 2026. My husband, Abraham, has recently been diagnosed with an extremely rare… pic.twitter.com/PS0Dxp5zpd
ஈரான் போர்
ஈரான் போர் விவகாரத்தில் டிரம்புடன் ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடுகள்
துளசி காபார்ட் தனது கணவரின் உடல்நலனைக் காரணமாகக் கூறினாலும், அவருக்கும் அதிபர் டிரம்பிற்கும் இடையே ஈரான் போர் விவகாரத்தில் கடுமையான அரசியல் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகப் பல அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா ஈரானைத் தாக்குவதை அவர் கடந்த மார்ச் மாதத்திலிருந்தே தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்கத் தாக்குதலில் ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் முற்றிலும் அழிக்கப்பட்ட பிறகு அவர்கள் மீண்டும் அணு ஆயுதங்களை உருவாக்கவில்லை என்று காபார்ட் கூறிய கருத்து, டிரம்ப் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றிலும் முரணாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய அதிகாரிகள் விலகல்
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் முக்கிய அதிகாரிகள்
துளசி காபார்ட்டின் இந்த அதிரடி ராஜினாமாவைத் தொடர்ந்து, அவர் வரும் ஜூன் 30 ஆம் தேதியுடன் தனது பதவியிலிருந்து முழுமையாக விலகுவார் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாகப் முதன்மைத் துணை இயக்குனரான ஆரோன் லூகாஸ் தற்காலிக இயக்குனராகச் செயல்படுவார் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த மாதங்களில் குடியேற்ற விவகாரங்களைக் கையாண்ட உள்துறைச் செயலர் கிறிஸ்டி நோம் மற்றும் அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி ஆகியோர் டிரம்ப் நிர்வாகத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர் என்பதால், இது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.