வரலாற்றில் முதன்முறையாக உலகில் குழந்தைகளை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
செய்தி முன்னோட்டம்
மனித வரலாற்றிலேயே முதன்முறையாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட 65 வயதைக் கடந்த முதியவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியகத்தின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாலும், மருத்துவ வளர்ச்சியால் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து வருவதாலும் கணிக்கப்பட்டதை விட மிக விரைவாகவே இந்த வரலாற்று சிறப்புமிக்க மக்கள் தொகை மாற்றம் உலகளவில் ஏற்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
ஆயுட்காலம்
பிறப்பு விகித சரிவும் அதிகரிக்கும் ஆயுட்காலமும்
2025 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உலகின் மொத்த மக்கள் தொகையில் முதியவர்களின் பங்களிப்பு 10.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உலக மக்கள் தொகையில் சுமார் 71 சதவீதம் பேர், ஒரு பெண்ணிற்கு 2.1 குழந்தைகள் என்ற மாற்று விகிதத்திற்கும் குறைவான பிறப்பு விகிதம் கொண்ட நாடுகளில் வசிக்கின்றனர்.
சீனா, இந்தியா, பங்களாதேஷ், மெக்சிகோ மற்றும் வியட்நாம் ஆகிய அதிக மக்கள் தொகை கொண்ட முக்கிய நாடுகளிலும் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஐந்தில் ஒருவர்
2060ல் ஐந்தில் ஒருவர் முதியவராக இருக்கும் நிலை
தற்போது உலகளவில் 852 மில்லியனாக இருக்கும் முதியவர்களின் எண்ணிக்கை 2060 ஆம் ஆண்டில் 2 பில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் 2060ல் பூமியில் வாழும் ஐந்தில் ஒருவர் 65 வயதைக் கடந்தவராக இருப்பார்.
வளர்ந்த நாடுகளில் மட்டுமின்றி ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகள் உள்ளிட்ட வளரும் நாடுகளிலும் முதியவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
நெருக்கடி
பொருளாதார நெருக்கடியும் நலத்திட்டங்களின் சவாலும்
முதியவர்களின் எண்ணிக்கை இவ்வளவு விரைவாக அதிகரித்து வருவது பல நாடுகளின் சமூக நலத்திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் சவாலாக அமையும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
வேலை செய்யும் இளம் தலைமுறையினரின் எண்ணிக்கை குறைந்து, ஓய்வூதியம் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அது நாடுகளின் நிதிநிலையிலும், அரசு நிர்வாகத்திலும் தாங்க முடியாத அளவிற்கான பணிச் சுமையை உருவாக்கும்.