
டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புடின் - இருநாட்டு உறவுக்கு புதிய உத்வேகம்!
செய்தி முன்னோட்டம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தாண்டு டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் இந்தியா வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயம், இந்தியா-ரஷ்யா இருநாட்டு உறவுகளுக்கு முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைகள், குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் தொடர்பான 50% வரி விதிப்பு, இந்தியாவை சிக்கலுக்குள் தள்ளிய நிலையில், மத்திய அரசு புதிய மாற்று வழிகளை தேடி வருகிறது. இந்திய தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, பிற நாடுகளுடன் வணிக உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ரஷ்யா மற்றும் சீனாவுடன் இந்தியாவின் நெருக்கம் மேலும் வலுப்பெறும் நிலையில், புடினின் இந்தியப் பயணம் அதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம்.
எதிர்பார்ப்பு
இரு நாட்டு உருவங்களும் வலுப்பெறும் என நம்பிக்கை
இந்த விஜயத்தின் போது, இருநாடுகளுக்கிடையே பொருளாதாரம், ஆற்றல், பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. விளாடிமிர் புடின் மற்றும் பிரதமர் மோடி, கடைசியாக சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் நேரில் சந்தித்து உரையாடியிருந்தனர். மேலும், இரண்டு வாரங்களுக்கு முன்பு புடின், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி தொலைபேசியில் தொடர்பு கொண்டது இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துகிறது. அதிபர் புடின் கடந்த 2021ஆம் ஆண்டு, ரஷ்யா-உக்ரைன் போருக்கு முன் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெறவுள்ள இந்த விஜயம், பன்னாட்டு அரசியல் மற்றும் வர்த்தக சூழலில் முக்கிய நெடுங்கால பயணத்துக்கு வித்திடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.