ரியாத் சர்வதேச விமான நிலையம் அருகே ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; சவுதி அரேபியா அவசர எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் எரிபொருள் சேமிப்புப் பகுதி அருகே சனிக்கிழமை (செப்டம்பர் 19) பயங்கர வெடிச்சத்தம் கேட்டதுடன், அடர்ந்த கருப்புகைப் மண்டலமும் எழும்பியது. ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த சம்பவம் சவுதி அரேபியா முழுவதும் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
ரியாத் மக்களுக்கு எச்சரிக்கை
ரியாத் மக்களுக்கு முதன்முறையாக விடுக்கப்பட்ட வான்வழி எச்சரிக்கை
இந்த வெடிவிபத்து சம்பவத்தைத் தொடர்ந்து, ரியாத் நகரில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு சவுதி பாதுகாப்புப் படையினர் அவசர வான்வழித் தாக்குதல் எச்சரிக்கையை விடுத்தனர்.
"நகரத்தின் வான்பகுதி எதிரிகளின் வான்வழி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது" என்ற எச்சரிக்கை செய்தி மக்களின் கைபேசிகளுக்கு அனுப்பப்பட்டது.
இந்த மோதல் தீவிரமடைந்த பிறகு ரியாத் நகருக்கு சவுதி அரசு இத்தகைய அவசர எச்சரிக்கையை விடுப்பது இதுவே முதல்முறையாகும்.
தாக்குதல் உரிமைகோரல்
ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் உரிமைகோரலும் சவுதியின் பதிலும்
ரியாத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மற்றும் யான்பு துறைமுகப் பகுதியில் உள்ள அராம்கோ எரிபொருள் மையங்களை இலக்காகக் கொண்டு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் வெற்றிடத் தாக்குதல் நடத்தியதாக ஹூதி படைத் தளபதி யஹ்யா சாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
எனினும், ஹூதி அமைப்பால் ஏவப்பட்ட ஏவுகணையைத் தங்களது வான் பாதுகாப்பு மண்டலம் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தி அழித்ததாக சவுதி அரேபியக் கூட்டுப் படைத் தளபதி உறுதிப்படுத்தியுள்ளார்.
பிராந்தியத்தில் பதற்றம்
விமானப் போக்குவரத்து பாதிப்பும் பிராந்தியத்தில் நிலவும் பதற்றமும்
இந்த வெடிவிபத்து காரணமாக ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமடைந்ததுடன், சில சேவைகள் ரத்து செய்யப்பட்டு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக ஃபிலைட்ராடார்24 தளம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் மெக்கா பகுதியில் ஹூதிகள் தாக்குதல் நடத்தியதாக சவுதி குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு பதிலடியாக சவுதி நடத்திய விமானத் தாக்குதல்களுக்குப் பிறகே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இதனால் மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.