LOADING...
பிலிப்பைன்ஸில் 350 பயணிகளுடன் மூழ்கிய கப்பல்! 13 உடல்கள் மீட்பு; பலரைக் காணவில்லை!
பிலிப்பைன்ஸில் 350 பேருடன் சென்ற கப்பல் விபத்தில் சிக்கியதில் 13 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸில் 350 பயணிகளுடன் மூழ்கிய கப்பல்! 13 உடல்கள் மீட்பு; பலரைக் காணவில்லை!

எழுதியவர் Sekar Chinnappan
Jan 26, 2026
08:23 am

செய்தி முன்னோட்டம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் சுமார் 350 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பயணிகள் கப்பல் இன்று (ஜனவரி 26) அதிகாலை கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எம்/வி திரிஷா கெர்ஸ்டின் 3 (M/V Trisha Kerstin 3) என்ற சரக்கு மற்றும் பயணிகள் கப்பல், ஜாம்போங்கா நகரிலிருந்து ஜோலோ தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதில் 332 பயணிகளும் 27 ஊழியர்களும் இருந்தனர். நள்ளிரவு தாண்டிய வேளையில், பாசிலான் மாகாணத்தில் உள்ள பலுக்-பலுக் தீவு அருகே சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் கப்பல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திடீரென மூழ்கத் தொடங்கியது.

மீட்பு நடவடிக்கை

மீட்புப் பணிகள் மற்றும் பலி எண்ணிக்கை

விபத்து நடந்தபோது வானிலை சீராகவே இருந்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை, கடற்படை கப்பல்கள், பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் மற்றும் உள்ளூர் மீன்பிடி படகுகள் மீட்புப் பணியில் இறங்கின. இதுவரை 244 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கடலில் இருந்து 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலியானவர்களில் இருவரின் உடல்கள் பாசிலான் மாகாணத் தலைநகர் இசபெலாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மாயமான மற்ற பயணிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காரணம்

விபத்துக்கான காரணம் என்ன?

கப்பல் மூழ்கியதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்று கடலோரக் காவல்படைத் தளபதி ரோமல் துவா தெரிவித்துள்ளார். கப்பலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பயணிகள் ஏற்றப்படவில்லை என்றும், துறைமுகத்திலிருந்து புறப்படும்போது அனைத்துப் பாதுகாப்புச் சான்றிதழ்களும் சரியாக இருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் தீவுக்கூட்டங்களில் பழைய கப்பல்கள், போதிய பராமரிப்பின்மை மற்றும் பாதுகாப்பு விதிகளைச் சரியாகப் பின்பற்றாதது போன்ற காரணங்களால் இதுபோன்ற கடல் விபத்துகள் அடிக்கடி நிகழ்வது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement