
துருக்கியில் அழகுசாதன அறுவை சிகிச்சை செய்யப்போய் சடலமாக திரும்பிய மொசாம்பிக் பாடகி
செய்தி முன்னோட்டம்
ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் 31 வயதான பாடகியும் சமூக ஊடக இன்ஃபுளூயன்சருமான அனா பார்பரா புர் புல்ட்ரினி, துருக்கியின் இஸ்தான்புல்லில் அழகை மெருகேற்றுவதற்கான காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இறந்தார்.
அவர் தனது கணவர், பிரபல கலைஞர் எல்கர் சூயாவுடன், துசா மருத்துவமனையில் மார்பகப் பெருக்குதல், லிபோசக்ஷன் மற்றும் ரைனோபிளாஸ்டிக்காக துருக்கிக்குச் சென்றார்.
புல்ட்ரினி துசா மருத்துவமனையுடன் ஒரு விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், விளம்பரத்திற்காக அறுவை சிகிச்சைகளை இலவசமாகப் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 90 நிமிட மருத்துவர்கள் முயற்சி செய்தும், இறுதியில் அவர் மரணத்தைத் தழுவினார்.
சர்ச்சை
மருத்துவமனை மீது வெடிக்கும் சர்ச்சை
ஒரு மாதத்திற்கு முன்பு அவரை மணந்த அவரது கணவர், அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டதை விட முன்னதாகவும் சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகளிலும் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மருத்துவ ரீதியாக அறுவை சிகிச்சைக்கு முன்பு சாப்பிடக் கூடாது என்றாலும், அறுவை சிகிச்சைக்கு முன்பு அனா சாப்பிட்டதாகக் குறிப்பிட்டு, அவர் தயாராகவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
இவ்வளவு விரைவாக அறுவை சிகிச்சை செய்ய எந்த அவசர மருத்துவ காரணமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
அறுவை சிகிச்சை தொடர்பான பிற இறப்புகள் குறித்து முன்னர் விசாரணையை எதிர்கொண்ட துசா மருத்துவமனை, சமீபத்தில் தனது பெயரை மாற்றியதாகக் கூறப்படுகிறது.
புல்ட்ரினி குணமடையும் போது வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் எனப்படும் திடீர் சிக்கலை அனுபவித்ததாகக் கூறி மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது.