ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 6.2 ரிக்டர் அளவில் குலுங்கிய ஹொக்கைடோ
செய்தி முன்னோட்டம்
ஜப்பானின் வடக்குப்பகுதியான ஹொக்கைடோ தீவில் இன்று (ஏப்ரல் 27, 2026) அதிகாலை ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ அல்லது பெரிய அளவிலான பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தரவுகளின்படி, ஹொக்கைடோ தீவில் உள்ள சரபெட்சு நகருக்கு மேற்கே சுமார் 18 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலப்பரப்பிலிருந்து சுமார் 81 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் (JMA) இதை 6.2 ரிக்டர் என்றும், USGS 6.1 ரிக்டர் என்றும் கணக்கிட்டுள்ளன.
சுனாமி
சுனாமி எச்சரிக்கை இல்லை
நிலநடுக்கத்தை தொடர்ந்து கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இருப்பினும், ஜப்பானிய நில அதிர்வு அளவுகோலில் இது 'அப்பர் 5' என்ற தீவிரத்தில் பதிவாகியுள்ளது. இந்தத் தீவிரத்தில் மக்கள் நடமாடுவது கடினம் என்பதோடு, உறுதி இல்லாத சுவர்கள் இடியும் வாய்ப்பு உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் 7.7 ரிக்டர் அளவில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அதை தொடர்ந்து 'மெகா நிலநடுக்கம்' ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால், இன்றைய நிலநடுக்கம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. ஓட்சுச்சி மற்றும் காமைஷி போன்ற துறைமுக நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டிருந்தனர்.