மக்காவ்வில் வினோதம்: மூதாட்டியை பயமுறுத்திய ரோபோ கைது?
செய்தி முன்னோட்டம்
நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ஒரு வினோதமான நிகழ்வாக, மக்காவ் நகரில் மூதாட்டி ஒருவரை பயமுறுத்திய ஹியூமனாய்டு ரோபோவை போலீஸார் 'கைது' செய்து அழைத்து சென்ற சம்பவம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. போலீசார் அந்த ரோபோவை கைது செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ரோபோ ஒரு உள்ளூர் கல்வி மையத்திற்குச் சொந்தமானது என்பது கூடுதல் சுவாரசியம்.
விவரங்கள்
நடந்தது என்ன?
கடந்த வியாழக்கிழமை இரவு, மக்காவ் நகரின் பட்டானே பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு அருகே 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனது செல்போனைப் பார்த்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 'Unitree G1' என்ற மாடல் ஹியூமனாய்டு ரோபோ ஒன்று அவருக்கு பின்னால் வந்து நின்றது. திடீரென தனக்கு பின்னால் விளக்குகள் எரிய ஒரு இயந்திர மனிதன் நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி, ரோபோவை பார்த்து ஆவேசமாக கத்த தொடங்கினார். "நீ என் இதயத் துடிப்பை அதிகரிக்க செய்கிறாய்! உனக்குச் செய்ய எவ்வளவோ வேலைகள் இருக்கிறது, இதையெல்லாம் ஏன் செய்கிறாய்? உனக்கு என்ன பைத்தியமா?" என்று அவர் கத்துவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நடவடிக்கை
போலீஸ் நடவடிக்கை
தகவலறிந்து வந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள், அந்த ரோபோவின் தோள் மீது கை வைத்து, ஒரு குற்றவாளியை அழைத்துச் செல்வது போல அங்கிருந்து கூட்டி சென்றனர். இதை பார்த்த நெட்டிசன்கள்,"வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு ரோபோ கைது செய்யப்பட்டுள்ளது" என்று கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர். அதிர்ச்சியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பினார்.
விளக்கம்
கல்வி மையத்தின் விளக்கம்
இந்த ரோபோ ஒரு உள்ளூர் கல்வி மையத்திற்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து அந்த மையத்தின் பிரதிநிதி டோவின் மக் கூறுகையில்: "அந்தப் பெண்மணி பாதையின் நடுவில் நின்று போன் பார்த்துக் கொண்டிருந்ததால், ரோபோவால் அவரைக் கடந்து செல்ல முடியவில்லை. இதனால் ரோபோ அவருக்கு பின்னால் காத்திருந்தது. அப்போது அவர் திடீரெனத் திரும்பிப் பார்த்ததால் அதிர்ச்சியடைந்துவிட்டார்". "இந்த ரோபோ தன்னிச்சையாகவும் (Autonomous), ரிமோட் மூலமும் இயக்கக்கூடியது" என்றும் அவர் விளக்கமளித்தார். ரோபோவை இயக்கிய 50 வயது நபரை எச்சரித்த போலீஸார், பொது இடங்களில் இதுபோன்ற இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி ரோபோவை அவரிடமே ஒப்படைத்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
🚨A humanoid robot arrested by police in Macau,China, after it allegedly frightened a 70-year-old woman. pic.twitter.com/XsFuqp8YOl
— Indian Infra Report (@Indianinfoguide) March 16, 2026