பாகிஸ்தானில் கவிழ்கிறதா ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி? ராணுவ தளபதி அசீம் முனீர் திட்டம்!
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி இடையே கருத்து வேறுபாடு தீவிரமடைந்துள்ளது. நாட்டில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக நக்வி குற்றம் சாட்டியுள்ளார். ராணுவ தளபதி அசீம் முனீருடன் நக்வி நெருங்கிய உறவில் உள்ளதால், ராணுவ ஆதரவோடு ஷெபாஸ் ஷெரீப்பின் ஆட்சியை கவிழ்க்க திட்டம் தீட்டப்படுவதாக கூறப்படுகிறது. பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் வேளையில், இந்த உட்கட்சி மோதல் பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டம்
அரசிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) ஆகிய பகுதிகளில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
பலுசிஸ்தான் மக்கள் தங்களுக்குத் தாங்களே சுதந்திரம் அறிவித்துக் கொண்டுள்ள சூழலில், PoK பகுதியில் போராட்டம் நடத்துவோரை நசுக்க முயலும் முயற்சியில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இத்தகைய பெரும் உள்நாட்டுக் குழப்பங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரின் கை தொடர்ந்து ஓங்கி வருகிறது.
மோதல்
ஷெபாஸ் ஷெரீப் - மோஷின் நக்வி இடையிலான பகிரங்க மோதல்!
இதனிடையே, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் உள்நாட்டமைச்சர் மோஷின் நக்வி ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றி பகிரங்க மோதலாக உருவெடுத்துள்ளது.
சமீபத்தில் பேசிய அமைச்சர் மோஷின் நக்வி, பாகிஸ்தான் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு நீதிபதிகள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து 21 ஆண்டுகளாக நடத்திய ஊழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
அத்துடன், நாட்டின் நிர்வாக அமைப்பு முழுமையாக சரிந்துவிட்டதாகவும் கூறி ஷெபாஸ் ஷெரீப்பை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
ரகசிய திட்டம்
ஆட்சியைப் பிடிக்க ரகசிய காய்நகர்த்தல்!
பாதுகாப்பு விவகாரங்கள் சார்ந்த ஆய்வாளர்களின் கூற்றுப்படி, உள்நாட்டமைச்சர் மோஷின் நக்வியும், ராணுவ தளபதி அசீம் முனீரும் நெருங்கிய உறவினர்கள் என்று கூறப்படுகிறது.
ராணுவத்தின் ஆதரவோடு இயங்கும் மோஷின் நக்வி, பாகிஸ்தானின் அடுத்த பிரதமராகும் நோக்கில் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராகக் காய்களை நகர்த்தி வருகிறார்.
ராணுவ தளபதியும், உள்நாட்டமைச்சரும் இணைந்த இந்த 'கூட்டணி', ஷெபாஸ் ஷெரீப் ஆட்சியை எந்த நேரத்திலும் கவிழ்க்கக்கூடும் என்பதால் பாகிஸ்தான் அரசியலில் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.