ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது! ஈரான் உச்ச தலைவர் காமேனி அமெரிக்கா தாக்குதலில் பலி
செய்தி முன்னோட்டம்
ஈரான் நாட்டின் மிக உயரிய அதிகாரமும், ஆன்மீகத் தலைமையும் கொண்ட அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன. பிப்ரவரி 28, 2026 அன்று தெஹ்ரானில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் முக்கிய ராணுவ நிலைகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகத் தஸ்நிம் மற்றும் ஃபார்ஸ் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் செய்தி உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப்
டொனால்ட் டிரம்பின் பகிரங்க அறிவிப்பு
இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடுகையில், "உலகின் மிக மோசமான மனிதர்களில் ஒருவரான காமேனி ஒழிக்கப்பட்டுவிட்டார். இது ஈரான் மக்களுக்குக் கிடைத்த நீதி மட்டுமல்ல, ஈரானிய ஆட்சியாளர்களால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள பல நாட்டு மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்" என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் மற்றும் பயங்கரவாதச் செயல்பாடுகளுக்குக் காமேனியே மூளையாகச் செயல்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
உருக்கமான பதிவு
காமேனியின் எக்ஸ் பக்கத்தில் உருக்கமான பதிவு
அவரது மரணம் குறித்த செய்திகள் வெளியான சில நிமிடங்களிலேயே, காமேனியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் குர்ஆன் வசனம் ஒன்று பதிவிடப்பட்டது. "அல்லாஹ்விடம் செய்த சத்தியத்திற்கு உண்மையாக இருந்த விசுவாசிகளில் அவரும் ஒருவர். தனது வாக்குறுதியை நிறைவேற்றியவர் அவர்" எனும் பொருளில் அந்தப் பதிவு அமைந்திருந்தது. இது தற்போதைய ஈரானிய ஆதரவாளர்களிடையே உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் அடுத்தகட்ட தலைமை யார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
அதிகாரப் பயணம்
40 ஆண்டுகால அதிகாரப் பயணம்
அயதுல்லா அலி காமேனி 1989 ஆம் ஆண்டு முதல் ஈரானின் உச்ச தலைவராக இருந்து வந்தார். சுமார் நான்கு தசாப்தங்களாக அந்நாட்டின் அரசியல், ராணுவம் மற்றும் நீதித்துறையைத் தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 1939 இல் பிறந்த இவர், ஈரானியப் புரட்சியின் போது முக்கியப் பங்காற்றியவர். 1989 இல் ரூஹொல்லா கொமேனிக்கு பிறகு பதவியேற்ற இவர், மத்திய கிழக்கின் நீண்டகாலத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இவரது மறைவு ஈரானின் எதிர்காலத்திலும், மத்திய கிழக்கின் அரசியலிலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.