LOADING...
ஈரானில் பதுங்கு குழியில் முடங்கியுள்ளாரா உச்ச தலைவர் மொஜ்தபா?
மொஜ்தபா கமேனி ஒரு ரகசிய இடத்தில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஈரானில் பதுங்கு குழியில் முடங்கியுள்ளாரா உச்ச தலைவர் மொஜ்தபா?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 24, 2026
08:31 am

செய்தி முன்னோட்டம்

ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, உடல்நிலை பாதிப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் தற்போது ஒரு ரகசிய இடத்தில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் உயிருடன் இருந்தாலும், அவரது செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், ஈரானின் ஆட்சி அதிகாரம் தற்போது அந்நாட்டுப் புரட்சிகர ராணுவத் தளபதிகளின் (IRGC) நேரடிப் பிடிக்குச் சென்றுள்ளது. ராணுவத் தளபதிகள் கையில் அதிகாரம் சென்றதன் விளைவாக, அமெரிக்காவுடன் திட்டமிடப்பட்டிருந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. அமெரிக்காவின் கடல்வழி முற்றுகைக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்பதில் ராணுவத் தளபதிகள் பிடிவாதமாக உள்ளனர். அதிபர் மசூத் பெசெஷ்கியன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் போன்ற சிவில் தலைவர்கள் தற்போது நாட்டின் உள்நாட்டு விவகாரங்களைக் கவனிப்பதோடு மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளனர்.

உச்ச தலைவர்

பதுங்கு குழியில் உச்ச தலைவர்: உடல்நிலை குறித்த அதிர்ச்சித் தகவல்

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையின்படி, கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மொஜ்தபா கமேனி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். அந்தத் தாக்குதலில் அவரது தந்தை அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், மொஜ்தபா உயிர் பிழைத்தாலும் அவரது ஒரு கால் மற்றும் ஒரு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அவரது முகமும் உதடுகளும் தீக்காயங்களால் சிதைந்துள்ளதால், அவரால் பேசவோ அல்லது பொதுவெளியில் தோன்றவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனது பலவீனமான தோற்றத்தை மக்கள் பார்க்கக் கூடாது என்பதற்காகவே அவர் மறைவிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆட்சி

காகித கடிதங்கள் மூலம் நடைபெறும் ஆட்சி

மறைவிடத்திலிருந்து மொஜ்தபா கமேனி பிறப்பிக்கும் உத்தரவுகள் அனைத்தும் கைப்பட எழுதப்பட்ட கடிதங்கள் மூலமாகவே பரிமாறப்படுகின்றன. டிஜிட்டல் வழித்தடங்களை இஸ்ரேல் அல்லது அமெரிக்கா இடைமறிக்கக்கூடும் என்ற அச்சத்தில், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் மூலம் மனித சங்கிலி முறையில் இந்த ரகசியக் கடிதங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. மூத்த அமைச்சர்கள் கூட அவரைக் காணச் செல்ல அஞ்சுகின்றனர். ஏனெனில் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று இஸ்ரேலியப் படைகள் மொஜ்தபாவை கொன்றுவிடக்கூடும் என்ற பயம் ஈரானிய அதிகாரிகளிடையே நிலவுகிறது.

Advertisement

அதிகாரம்

ராணுவத் தளபதிகளின் கையில் ஈரானின் அதிகாரம்

உச்ச தலைவர் முடங்கியுள்ள நிலையில், ஈரானின் வெளியுறவுக் கொள்கை, போர் உத்திகள் மற்றும் தேசியப் பாதுகாப்பு குறித்த முக்கிய முடிவுகளைப் புரட்சிகர ராணுவத்தின் (IRGC) தளபதிகள் கூட்டாக எடுத்து வருகின்றனர். ஒரு காலத்தில் ஒரே ஒரு நபரின் கையில் இருந்த அதிகாரம், தற்போது ஒரு ராணுவக் குழுவின் கைக்கு மாறியுள்ளது. "மொஜ்தபா ஒரு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் (Director) போல இருக்கிறார், ஆனால் ராணுவத் தளபதிகளே அதன் வாரிய உறுப்பினர்களாக (Board Members) இருந்து அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்கள்" என்று அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Advertisement