உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி! ஹார்முஸ் நீர்ச்சந்தியை திறந்தது ஈரான்!
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த போர் பதற்றத்திற்கு ஒரு முக்கியத் தீர்வாக, ஈரான் இன்று ஹார்முஸ் ஜலசந்தியை அனைத்து வணிகக் கப்பல்களின் போக்குவரத்துக்காகவும் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவிட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே வியாழக்கிழமை எட்டப்பட்ட 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் தனது எக்ஸ் (X) தளத்தில் "லெபனான் போர்நிறுத்தத்திற்கு இணங்க, ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது," என்று பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
In line with the ceasefire in Lebanon, the passage for all commercial vessels through Strait of Hormuz is declared completely open for the remaining period of ceasefire, on the coordinated route as already announced by Ports and Maritime Organisation of the Islamic Rep. of Iran.
— Seyed Abbas Araghchi (@araghchi) April 17, 2026
டிரம்ப்
நன்றி கூறிய டிரம்ப், ஆனால்..
ஈரானின் இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், "ஹார்முஸ் நீர்ச்சந்தி முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. நன்றி!" எனப் பதிவிட்டுள்ளார். இருப்பினும், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் முழுமையடையும் வரை அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடரும் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஈரானியத் துறைமுகங்களுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை 100% பேச்சுவார்த்தை முடியும் வரை அமலில் இருக்கும். பெரும்பாலான அம்சங்கள் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுவிட்டதால், இந்த விவகாரத்தில் மிக விரைவில் ஒரு தீர்வு எட்டப்படும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வரலாறு
ஹார்முஸ் ஜலசந்தி: ஒரு பார்வை
கடந்த மார்ச் 2-ம் தேதி, ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பிறகு, இந்த முக்கிய எரிசக்தி வழித்தடத்தை ஈரான் முடக்கியது. அந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகின் 20% க்கும் அதிகமான கச்சா எண்ணெய் இந்த ஜலச்சந்தி வழியாகவே செல்வதால், இதன் முடக்கம் உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு வழிவகுத்தது. தற்போது இந்த ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளதால், ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் நிலவி வந்த விமான எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், அமெரிக்கா - ஈரான் இடையிலான இறுதி ஒப்பந்தம் பாகிஸ்தானில் கையெழுத்தாகும் வரை இப்பகுதியில் ஒருவிதமான பதற்றம் நீடிக்கவே செய்யும்.