கனட-இந்திய பிரச்சனை: சட்டத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசி இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி முகமது பின் சயீத்துடன், இந்தியா குறித்தும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் குறித்தும் விவாதித்தேன் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். "இன்று முகமது பின் சயீத் அவர்களும் நானும் தொலைபேசியில் இஸ்ரேலின் தற்போதைய நிலைமை குறித்து பேசினோம். நாங்கள் எங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினோம். குடிமக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதன் அவசியத்தைப் பற்றி விவாதித்தோம். இந்தியாவைப் பற்றியும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் - மற்றும் மதிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் பேசினோம்." என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்கனவே பதட்டமான நிலை நிலவி வரும் சமயத்தில், கனேடிய பிரதமர் இப்படி கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கனடா மற்றும் இந்தியாவுக்கு இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள்
இந்தியாவால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட நிஜ்ஜார், கடந்த ஜூன் 18ஆம் தேதி, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக சமீபத்தில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டால், ஏற்கனவே பதட்ட நிலையில் இருந்த இந்திய-கனடா உறவு மேலும் மோசமாகியது. இந்நிலையில், தற்போது கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியா குறித்தும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் குறித்தும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.