"இன்னைக்கு ராத்திரியும் ஆட்டத்தை ஆரம்பிக்கிறோம்": ஈரான் மீது மீண்டும் குண்டுமழை பொழிய டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் மிக உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், கடலோர ரேடார் மையங்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) போர்க்கப்பல்களை அமெரிக்க ராணுவம் தரைமட்டமாக்கிய சில மணிநேரங்களிலேயே, இன்று இரவும் ஈரான் மீது மீண்டும் மிகப் பெரிய அளவில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். துருக்கியில் நடைபெற்று வரும் நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் இடையே, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திப்பதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
எச்சரிக்கை
"இன்று இரவு மிகக் கடுமையான அடி இருக்கும்": டிரம்ப் எச்சரிக்கை
ஈரான் மீது அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு அதிபர் டிரம்ப் பதிலளிக்கையில், "நான் தற்போதே ஒரு சிறிய எச்சரிக்கையை விடுக்கிறேன்: இன்று இரவு நாங்கள் அவர்கள் மீது மிகவும் கடுமையான தாக்குதலை நடத்தப் போகிறோம். ஈரான் தலைவர்கள் அனைவரும் வெறும் குப்பைகள், மோசமான வன்முறை எண்ணம் கொண்ட மனநோயாளிகள். அவர்களிடம் அணுஆயுதம் இருந்தால் கண்டிப்பாக பயன்படுத்தியிருப்பார்கள். அவர்களுடன் இனி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது முற்றிலும் கால விரயம்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார். முன்னதாக, ஹார்முஸ் நீரிணையில் மூன்று வணிக எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, CENTCOM ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள 80-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தரைமட்டமாக்கியது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
NOW: President Trump warns the U.S. could completely dismantle Iran's electrical grid, bridges, and desalinization plants in a single day while also saying America's military may take over the regime's primary oil hub at Kharg Island.
— Fox News (@FoxNews) July 8, 2026
"We're not attacking at the highest level.… pic.twitter.com/dyTEEhpZsv
குற்றச்சாட்டு
அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறிவிட்டது: ஈரான் குற்றச்சாட்டு
அமெரிக்காவின் இந்த தாக்குதல்களுக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரான், அமெரிக்கா தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முதலில் மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ளது "ஈரானின் தெற்கு கடற்கரையில் உள்ள கண்காணிப்பு மற்றும் ரேடார் மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், இரு நாடுகளுக்கும் இடையே போடப்பட்ட தற்காலிக அமைதி உடன்படிக்கையை அப்பட்டமாக மீறும் செயலாகும். சர்வதேச சந்தையில் ஈரான் அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்தி எண்ணெய் விற்பனை செய்ய வழங்கப்பட்ட 60 நாள் சிறப்பு உரிமத்தை அமெரிக்கத் திறைசேரி திடீரென ரத்து செய்தது சட்டவிரோதமானது". லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் ராணுவத் தாக்குதல்களும் இந்த அமைதிச் சூழல் கெடுவதற்குக் காரணம் என்றும், இதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே முழுப் பொறுப்பு என்றும் ஈரான் கூறியுள்ளது.
மிரட்டல்
அண்டை நாடுகளுக்கு ஈரான் விடுத்த மிரட்டல்
அமெரிக்காவின் அடுத்தகட்ட தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள தனது அண்டை நாடுகளுக்கு ஈரான் வெளியுறவுத்துறை கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. தங்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவோ அல்லது அதன் கூட்டணி நாடுகளோ தங்களின் நாட்டு மண்ணையோ அல்லது ராணுவ தளங்களையோ பயன்படுத்த அண்டை நாடுகள் அனுமதிக்கக் கூடாது என்றும், அவ்வாறு அமெரிக்காவுக்கு உதவி செய்யும் நாடுகள் ஈரானுக்கு எதிரான போரில் கூட்டாளிகளாகக் கருதப்பட்டு, அவர்கள் மீதும் ஐநா சாசனத்தின் பிரிவு 51-ன்படி ஈரானியப் படைகள் மிகக் கடுமையான பதிலடித் தாக்குதலை நடத்தும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.